Posted in சிறுகதை, தமிழ், History, inspirational, modern, New, short story, tamil

வேண்டாம் என்றானே!

தென்னிந்தியாவின் நடுமையத்தில் ரம்மியமாய் அமைந்திருந்த விருதுநகர் என்னும் ஊரில் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். தெளிந்த வானத்தை போன்று எளிமையானவன் அவன். பொன்னோ பொருளோ ஏதும்இன்றி சாதாரண சிறுவனாய் சுற்றி வந்தான். அவனிடம் சூப்பர் ஹீரோ சக்திகளோ கின்னஸ் புத்தகத்தில் இடம் பெரும் அளவிற்கு திறமைகளோ இருந்ததில்லை. ஆனால் நம் எல்லோரிடமும் இல்லாத ஒரு அற்புத குணம் அவனிடம் இருந்தது. “வேண்டாம் என்று கூறும் தைரியம் அவனுக்கு இருந்தது”. இதில் என்ன பெரிய அதிசயம்? என்று நீங்கள் கேட்கலாம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், இந்த உலகம் என்ன நினைக்கும் என்று ஒவ்வொரு நொடியும் யோசிக்கும் நம்மை போன்ற மனிதர்கள் மத்தியில் இதை எல்லாம் சிறிதும் கண்டு கொள்ளமல் தன் மனம் போன போக்கை பின் தொடரும் மிக பெரிய தைரியம் அந்த சிறுவனுக்கு இருந்தது. அவனின் இந்த தைரியம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தது. அவர்களின் கனவுகள் நினைவாக வழி வகை செய்தது. அவ்வளவு பெரிய மனிதனாய் மாறினான் இந்த சிறுவன். இந்த அற்புத சிறுவனின் கதையை சொல்லட்டுமா?


தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம்

அந்த சிறுவனுக்கு 6 வையதிருக்கும் போது மரணம் அவன் வீட்டிற்குள் நுழைந்து அவன் தந்தையை தன்னுடன் கூட்டி சென்றது. அன்றைய தினம் அவன் தன் வாழ்வின் மிக பெரிய முடிவொன்றை எடுத்தான். கல்வி வேண்டாம் என்றான். தன் பள்ளி நினைவுகளை எல்லாம் மூட்டை கட்டி விட்டு, தன்னை நெருக்கி கொண்டிருந்த வறுமையை எதிர்த்து போராட ஆரம்பித்தான்.

காலங்கள் உருண்டோடியது. அந்த சிறுவன் மதிப்பு மிக்க இளைஞனாய் வளர்ந்தான். தனது தந்தையின் மளிகை வியாபாரத்தின் மூலம் தன் தாயையும் தங்கையையும் கவனித்துக் கொண்டான். முன்று வேலை உணவு, இருக்க நல்ல வீடு – வாழ்க்கை அவன் எதிர்பார்த்ததை விட நன்றாக மாறியது. “கல்யாணம் பண்ணிக்கோடா ராசா. என் கண்ணு குளிர பாக்க வேண்டாமா” ஒவ்வொரு இரவும் அவன் தாய் கெஞ்சினாள். ஆனால்  

அவனுக்கோ விண்ணை தொட ஆசை. அந்த குட்டி கிராமத்தில் தன் வாழ்வை முடித்துக் கொள்ள அவன் விரும்ப வில்லை. அவனது பதினெட்டாம் வயதில் யாருமே எதிர்பார்த்திராதா, நம்மில் பெரும்பாலானோர் செய்ய துணியாத ஒன்றை செய்தான். அவன் தனது குடும்பம், தொழில், எங்கோ காத்திருந்த முறைப்பெண் என தன்னை கட்டி வைத்திருந்த பாரங்களுக்கெல்லாம் ஒரு முற்றுபுள்ளி வைத்து விட்டு இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்க இந்திய தேசிய காங்கிரஸில் நுழைந்தான்.

அவன் செய்தது சரியா? தவறா? யாருக்கும் தெரியும். ஒரு வேலை தவறான முடிவாக கூட இருக்கலாம். ஆனால் அந்த குட்டி கிராமத்தின் எல்லைக்குள் தன் வாழ்க்கை முடிந்து விடுமோ என்ற பயம், விடை தெரியாத இந்த விடுதலை போராட்டத்தில் அவனை உந்தியது. தெருக்களிலும் வீதிகளிலும் சுதந்திர சுடரை பரப்ப ஆரம்பித்தான். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக ஏராளமான போராட்டங்களில் பங்கேற்றான். பல முறை கைது செய்யப்பட்டு சிறைக்கும் சென்றான் அந்த இளைஞன்.

அவனது 2௦ வருட கடின உழைப்பிற்க்காண பலன் ஒருநாள் அவன் வீடு தேடி வந்தது. கவுன்சிலர் என்னும் பதவியை அவனிடம் நீட்டியது. மாதா மாதம் தவறாமல் சம்பளம், கவுன்சிலர் என்னும் பட்டம், அதனோடு சேர்ந்த அதிகாரம். தெரு தெருவாய் சுற்றி வந்த அவனுக்கு ஒரு நிலையான பாதையாய் அமைந்தது அந்த பதவி. வயதாகி கொண்டே சென்ற அவனுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு. எந்த ஒரு புத்திசாலி மனிதனும் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்று கொண்டிருப்பான். ஆனால் அவனோ இந்த பதவி தனக்கு வேண்டாம் என்றான். “பதவிக்காக வேலை செய்பவன் நான் இல்லை. என் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். அது தான் என் குறிக்கோள். அதற்க்கு உதவாத எந்த பதவியும் எனக்கு தேவை இல்லை” என்று தைரியமாக கூறினான் அவன்.

உலகம் அவனை பைத்தியம் என்று எள்ளியது. அவனோ தன் கண்களுக்கு மட்டுமே புலப்பட்ட தன் கனவை நோக்கி நடந்தான்.  

அவனது ஐம்பதாம் வயதில் தன் வாழ்வில் மிக பெரிய மையில்கல்லை அவன் எட்டினான். தமிழ்நாட்டின் முதல்வராக அவன் தேர்ந்தெடுக்கப்பட்டான். அவனது அமைச்சரவையை தேர்வு செய்ய வேண்டிய நேரம் வந்தது. “எப்பவும் போல நம்ம கட்சில இருந்தே அமைச்சர்கள தேர்ந்தெடுத்து இலாகா ஒதுக்கணும் தலைவரே” கட்சி நிர்வாகம் அவனிடம் கூறியது. ஆனால் எப்பவும் போல அவன் தன்கென்று தேர்ந்தெடுத்த தனி வழியில் செயல்பட்டான். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சட்ட மேதையான சுப்பிரமணியனை தனது நிதி அமைச்சராக நியமித்தான். அவன் முடிவுக்கு பல எதிர்ப்புகள் எழுந்தன. “ஒருவர் குறைகளை இன்னொருவர் நிறைவு செய்து ஒன்றாய் செயல் பட வேண்டியா அமைச்சரவையில் படிப்பறிவில்லாத என் குறைகளை தீர்க்க சுப்பிரமணியனை போன்றதொரு படித்த மேதை நிச்சயம் தேவை” என்று புன்னகை சேர்ந்த துணிவுடன் கூறினான்.

“கருவூலம் காலி தலைவரே. அரசு பள்ளிகளை நடத்த கூட காசு இல்ல”, தமிழகத்தின் முதல்வராய் அவன் கேட்ட முதல் வார்த்தைகள் இவை.

குலகல்வி திட்டம் – பள்ளி இயங்கும் நேரத்தை 6 மணி நேரத்தில் இருந்த 3 மணி நேரமாக குறைபதன் மூலம் இப்போது இருக்கும் ஆசிரியர்களை கொண்டே இரு மடங்கு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் திட்டம். “குழந்தைகள் தங்கள் குடும்ப வர்த்தகத்தை ஓய்வு நேரத்தில் கற்றுக்கொள்ளலாம். ஒரு குயவனின் மகன் குயவன் ஆகட்டும், வணிகனின் மகன் வணிகம் கற்றுக் கொள்ளட்டும். நாம் இருக்கும் நிலைமையில் இதை தான் நம்மால் செய்ய முடியும். நெருக்கடி காலங்களில் முழுமையான கல்வி சாத்தியமில்லை” அவன் அமைச்சர்கள் முன்மொழிந்தனர்.

ஆனால் அவனோ “குலகல்வி திட்டமாவது மண்ணாவது. இந்த மாதிரி அறை குறை திட்டம் எல்லாம் தமிழ் நாட்டுக்கு வேண்டாம். என் மக்களுக்கு தரமான சமமான கல்விய நானே தருவேன்” என்று சவால் விட்டான்.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு முதலமைச்சர் வீடு வீடாக சென்று தன் மக்களுக்காக நிதி திரட்டினார். அவமானமும் கேலி பேச்சும் அவனை பின் தொடர்ந்தது. சிலர் அவனை எள்ளினார். சிலர் அவனை முட்டாள் என்றனர். ஆனால் நல்ல மனிதர்கள் சிலர் அவன் செயலை பாராட்டினர். தங்களால் முடிந்த வரை உதவி செய்தனர். இதன் மூலம் பிறந்தது தான் மாநில கல்வி தொண்டு இயக்கம்.

இவ்வியக்கத்தின் மூலம் திரட்டிய நிதியால் மாநிலம் முழுவதும் பல புதிய பள்ளிகள் திறக்கப்பட்டன. பழைய பள்ளிகள் சீர் செய்யப்பட்டன.

ஆனால் இதையெல்லாம் தாண்டி முதல் முறையாக மதிய உணவு திட்டம் அணைத்து பள்ளிகளிலும் தொடங்கப்பட்டன. “ஒரு முறை என் பயணத்தின் போது மாடு மேய்ச்சிட்டு இருந்த சிறுவன் ஒருவன பார்த்தேன். ஏன் டா தம்பி, பள்ளி கூடத்துக்கு போகலையானு கேட்டபோ அந்த சிறுவன் சொன்னான் – ஐயா பள்ளிக்கு போன மூளைக்கு சோறு கிடைக்கும் ஆனா வைத்துக்கு? பசி முக்கியமா பள்ளி முக்கியமானா பசி தான ஐயா முக்கியம் அப்படின்னு சொன்னான் அந்த சிறுவன். அன்னைக்கு முடிவு செஞ்சேன். பள்ளிக்கூடம் மூளைக்கு மட்டும் இல்ல வயித்துக்கும் உணவளிக்கணும் அப்படின்னு. அதன் மூலம் பிறந்தது தான் இந்த மதிய உணவு திட்டம்” என்று மேடைகளில் முழக்கமிட்டான் அவன்.

இத்திட்டத்திற்கு பொது மக்கள், பிற மாநில அரசுகள், பத்திரிகைகள் என எல்லோரிடமும் இருந்து பாராட்டுகளும் ஆதரவும் குவிந்தது. பள்ளிகளில் சேர மாணவர்களுக்கு பெரும் ஊக்கமாக மாறியது. சாதி வேறுபாட்டை களையவும் கல்வி புரட்சியை தொடங்கவும் வழி வகை செய்தது

அவனின் முயற்சிகளின் மூலம் கிட்ட தட்ட 80,000 மில்லியன் ரூபாய் தன்னார்வ நன்கொடைகள் மூலம் திரட்டப்பட்டது. 2,00,000 மாணவர்கள் புதிதாக பள்ளிகளில் சேர்ந்தனர். 15,000 க்கும் மேற்பட்ட பள்ளிகள் மாநிலம் முழுவதும் கட்டப்பட்டன.

உலகமே முடியாது என்று கூறிய போதும் அதையெல்லாம் ஓரம் கட்டி விட்டு தன் முயற்சியினால் தான் சொன்ன சொல்லை நிறைவேற்றி முடித்தான் நம் ஹீரோ.

இன்றும் கூட லட்சகணக்கான மாணவர்களின் அறிவு பசியையும் வயிற்று பசியையும் ஆற்றும் உறைவிடமாய் தமிழக பள்ளிகள் அமைவதற்கு அவன் தான் காரணம். விண்ணை தாண்டி பறப்பதற்கு அவர்களுக்கு சிறகளித்தவன் அவன் தான். இன்று தமிழர்கள் பல பன்னாட்டு நிறுவனங்களில் தலைவர்களாய் இருப்பதற்கும் உலகின் எல்லா நாடுகளிலும் கோடி கட்டி பறப்பதற்கும் அவனும் ஒரு காரணம். இந்த கதையை எழுதும் நானும் கூட அவன் திறந்த பள்ளிகளில் ஒன்றில் படித்தவன் தான்.

நம் ஹீரோவின் ஆட்சியில் தமிழ்நாடு பொருளாதாரத்தில் செழித்தது. பல தொழில்துறை பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. அணைகள் மூலம் நீர் பாசன வசதி செய்யப்பட்டு விவசாயம் செழிக்க வழி வகை செய்யப்பட்டது. தமிழ்நாடு அவனின் 9 வருட பொற்கால ஆட்சியில் மலர்ந்தது.

ஆனால் இந்த வசந்த காலம் நீண்ட நாள் நிலைக்கவில்லை.

“முதல்வர் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார்” என்ற அதிர்ச்சி செய்தி மூளை முடுக்கெல்லாம் பரவியது. “முதல்வர் ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தாரு?” தெருக்கள் தோரும் மக்கள் குழம்பி நின்றனர்.

“பொருளாதார வளர்ச்சி, மக்கள் முன்னேற்றம் என ஒரு பக்கம் மகிழ்ச்சி சூழ்ந்து இருக்க மறு பக்கத்திலோ என்னை வளர்த்த என் கட்சி – இந்திய தேசிய காங்கிரஸ் நோயுற்று கிடக்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருக்கிறாள். எனக்கிருக்கும் இந்த பெயர் புகழ் பதவி எல்லாம் அவள் தந்தது. இப்படி இருக்க அவள் நிலையை கண்டும் காணாமல் என்னால் எப்படி இருக்க முடியும்? அவளை மீட்டெடுக்க வேண்டியது என் கடமை. . ஐ.என்.சி யின் தலைவர்களே கேளுங்கள்! உங்கள் பதவிகளை தூக்கி எறிந்து விட்டு ஐ.என்.சி யின் வேர்களை வலுப்படுத்த முன் வாருங்கள். ஐ.என்.சி பதவி பித்து பிடித்தவர்களால் அல்ல, இந்த நாட்டை நேசிக்கும் மனிதர்களால் ஆனது என்று இந்த உலகிற்கு நிருபியுங்கள்” ஆணித்தரமாய் கூறினான்.

சொன்னவாறே தன் சிங்காசனம் வேண்டாம் என்று உதறி தள்ளி விட்டு கட்சியை வலுபடுத்த தொடங்கினான்.   

பதவியை அவன் விட்டாலும் பதவி அவனை விட்டபாடில்லை. இந்தியாவின் மிக பெரிய சிம்மாசனம் அவனுக்காக காத்திருந்தது. பிரதமர் என்னும் பட்டம் – அவன் வீடு தேடி நின்றது. ஆம், 196௦ களில் நடந்த தேர்தலில் அவன் பிரதமர் பதவியில் போட்டியிட்டு வெற்றிபெறுவான் என்று உலகமே எதிர்பார்த்திருந்தது. ஆனால் என் ஹீரோவோ இதற்கெல்லாம் மயங்கவில்லை. “பதவியும் வேண்டாம் புகழும் வேண்டாம்” என்று ஆணித்தரமாக கூறினான்.

மற்றவர்களுக்கு உதவுவதையும் அவர்கள் புன்னகைக்கு காரணமாய் மாறுவதையும் தன் வாழ்கையின் இலட்சியமாக்கிக் கொண்டான். தனது பெரும் முயற்சியின் மூலம் இந்திரா காந்தியையும் லால் பகதூர் சாஷ்திரியையும் சுதந்திர இந்தியாவின் அடுத்தடுத்த பிரதமர்களாக பதவி வகுக்க உதவினான்.

அவரன் முதல்வராக இருந்த காலத்தில், விருதுநகர் நகராட்சி அவனது வீட்டிற்கு நேரடி நீர் இணைப்பை வழங்கியபோது, ​​அத்தகைய சிறப்பு சலுகைகள் எல்லாம் தனக்கு வேண்டாம் என்று ஏற்க மறுத்துவிட்டான்.

முதலமைச்சராக தனக்கு வழங்கப்பட்ட இசட்-லெவல் பாதுகாப்பைப் பயன்படுத்த மறுத்தான். அதற்கு பதிலாக ஒரே ஒரு போலீஸ் ரோந்து வாகனத்துடன் பயணம் செய்தான். அவன் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை, சொத்துக்கள் ஏதும் சேர்க்கவில்லை, அதிகாரத்திற்கு அடிமையாக வில்லை, ஒரு ரூபாய் கூட லஞ்சம் பெற்றதில்லை. அவன் இறந்தபோது, 130 ரூபாய் பணம், 2 ஜோடி செருப்பு, 4 சட்டை, 4 வேட்டி மட்டுமே அவன் உடைமையாக இருந்தது.

தனது கடைசி மூச்சு வரை, அநீதியையும் வறுமையையும் சமூகத்தை விட்டு அகற்ற போராடினான். யாருமே எதிர்பார்த்திராத உயரங்களையும் அடைந்தான்.

பணம், பெயர், புகழ், பதவி இவை எல்லாம் அவன் வாசலில் காத்துக் கிடந்த போதும் இவை ஏதும் வேண்டாம் என்று கூறி மக்களுக்கு நல்லது செய்வதை தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டான். அதை சாதித்தும் காட்டினான்.

வேண்டாம் என்று சொன்னானே அவன்.

அவன் வெறும் யாரும் இல்லை – கல்வி கண் திறந்த வள்ளல், கருப்பு சிங்கம், படிக்க மேதை, ஏழைகளின் தலைவன், கர்மவீரன் காமராசனே!

கர்மவீரர் காமராசர்

மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு உணவு வழங்கும் காமராசர்

சில நேரங்களில் நம் ஹீரோவை போல

வேண்டாம் என்று சொல்ல துணிவோமே!

வாய்ப்புகளை இருக்க பிடித்துக் கொள்

சலுகைகளை இருக்க கட்டிக் கொள்

இப்படி ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைக்காது

இப்படி ஒரு சலுகை பூமியிலே இல்லை

இந்த உலகம் உன்னிடம் கூறினாலும்

இது நமக்கு ஏற்றதா? என் வளர்ச்சிக்கு உதவுமா?

என் சந்தோஷத்திற்கு வழி வகுக்குமா?

என்று ஒரு முறை சிந்தித்துக் கொள் நண்பா

நீ வேண்டும் என்று ஏற்கும் ஒவ்வொரு முறையும்

மற்ற எல்லா வாய்ப்புகளையும் உனக்கே தெரியாமல் வேண்டாம் என்று உதறி தள்ளுகிறாய்

வேண்டும் வேண்டும் என்ற பித்தில் திரியும் இவ்வுலகில்

வேண்டாம் என்று கூறவும் கற்றுக் கொள்!

வணக்கம்

கதாசிரியரிடம் இருந்து,

என்ன நண்பர்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க? சாப்பிட்டாச்சா? கொரோனா லாக் டவுன்லாம் எப்படி இருக்கு?

கதை கொஞ்சம் கால தாமதமாகி விட்டது. அடியேனை மன்னித்து விடுங்கள்.

கதை எப்படி இருக்கு? எல்லாத்துக்கும் ஆமாம் ஆமாம் சொல்லி பழகிய நமக்கு வேண்டாம்னு சொல்றது கஷ்டம் தான்.

கொஞ்சம் கொஞ்சமா கத்துப்போமே? சரியா?

இது போன்ற கதைகளை படிக்க இந்த தொகுப்பு பட்டனை கிளிக் செய்யுங்க.

மீண்டும் சந்திப்போம் 🙂

Posted in சிறுகதை, தமிழ், fiction, History, inspirational, short story, tamil

வரலாற்றில் இடம் பிடிக்க – பாகம் II

அன்றிலிருந்து நானும் அந்த சிறுவனும் இணை பிரியா நண்பர்களாய் மாறினோம். மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு உறவு அது. இந்த பிரபஞ்சத்தின் மொழியை நாங்கள் கற்று கொண்டும். வார்த்தைகள் தேவை படவில்லை, வெறும் பார்வை ஒன்றே ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ள போதுமானதாய் தோன்றியது. நண்பனாய், துணைவனாய், சகோதரனாய் பிரிக்க முடியாத சக்தியாய் மாறினோம்.

அந்த சிறுவன் மாசிடோனியாவின் பட்டத்து இளவரசன் என்று அறிந்துக் கொண்டேன். அவன் ஒரு திறமையான வாள்வீரன், வில் வித்தையில் வல்லவன், தோற்கடிக்க முடியாத போராளி, உலகப் புகழ்பெற்ற அறிஞரான அவன் ஆசிரியர் அரிஸ்டாட்டிலின் மிக சிறந்த மாணவன், ஈடு இணை இல்லா புத்திசாலி. இப்படி அவனை பற்றி கூறிக் கொண்டே போகலாம்.

நானும் எதற்கும் சலித்தவன் இல்லை. காற்றை கிழித்துக் கொண்டு செல்லும் அளவுக்கு வேகம் கொண்டவன், போர்களத்தில் மரணம் கண் எதிரே நின்றாலும் அதனை தைரியமாய் எதிர்க் கொண்டு எதிராளியை கொன்று குவிக்கும் ஆற்றல் பெற்றவன். உலகம் கண்டிராத வலிமை மிக்க போர் ஆயுதம் நான்.

ஒலிம்பிக்ஸ் தான் நாங்கள் ஒன்றாய் எதிர்க்கொண்ட முதல் சவால். இந்த உலகிற்கு எங்கள் திறமையை வெளிபடுத்தக் கிடைத்த முதல் வாய்ப்பு. நாங்கள் தேரோட்ட பந்தையத்தில் கலந்து கொண்டோம். பல தேசத்து வீரர்களும் இளவரசர்களும் எங்களுடன் போட்டியிட்டனர்.

என் இளவரசன் என்னிடம் வந்து “நண்பா நாம் நிச்சயம் வென்று விடுவோம், நாம்மால் இதை நிச்சயம் சாதிக்க முடியும்” என்று பிரகாசமான புன்னகையுடன் கூறினான்.  

விசில் ஊதப்பட்ட அந்த நொடியில் எல்லா தேர்களும் சீறி பாய்ந்தன. நானும் பாலைவன புயலை போல் பாதையில் இருந்த தடைகளை எல்லாம் தூக்கி எறிந்து சீறி பாய்ந்தேன். நாங்கள் இருவரும் முன்னிலையில் ஓடிக் கொண்டிருந்த சமயத்தில் பின்னில் இருந்து வந்த ஈட்டி என் இளவரசனின் கைகளை சிராய்த்து சென்றது. அந்த ஈட்டி வேறு யாருடையதும் அல்ல, எங்கள் பின்னால் வந்துக் கொண்டிருந்த இளவரசன் நிக்கோலசுடையது. “நண்பா கொஞ்சம் வேகத்தை குறை” என்று என் இளவரசன் கூறினான். “இளவரசன் பயந்துவிட்டானோ? நிச்சயம் இருக்காது” எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அவன் மீது முழு நம்பிக்கை வைத்து என் வேகத்தை சற்றே குறைத்தேன். எங்களை முந்தி சென்றான் நிக்கோலஸ். எங்களை பயமுறுத்தி விட்டதாக நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான். அந்த நொடியில் என் இளவரசன் தன் வில்லை எய்தான். அம்பு நிகோலசின் முதுகில் பாய்ந்தது. அவன் தேர் நிலை தடுமாறி கவிழ்ந்தது. பிறகு என்ன, வெற்றி எங்கள் வசமானது.  

ஆலிவ் இலைகளால் ஆனா கிரீடம் எங்கள் சிரசை அலங்கரிக்க நாங்கள் எங்கள் தாய் நாட்டிற்கு திரும்பினோம். ஒலிம்பிக்ஸில் வெற்றி வாகை சூடிய இளவரசனையும் அவன் குதிரையையும் காண நாட்டு மக்கள் ஆர்வமாய் நகர வாசலில் காத்திருந்தனர். நாடே விழா கோலம் பூண்டிருந்தது. எங்கள் புகழ் பல நாடுகளுக்கு காட்டு தீ போல் பரவியது.

என் இளவரசனின் பத்தொன்பதாம் வயதில் உலகை வெல்வதற்கான எங்கள் பயணம் தொடங்கியது. அணைத்து போர் கலைகளையும் கற்று தேர்ந்த எம் நாட்டின் தலை சிறந்த வீரர்கள் அடங்கிய படையுடன் நாங்கள் முன்னேறினோம்.

எங்கள் பயணம் மசிடோனியாவில் தொடங்கி இந்தியா வரை சென்றது. எங்கள் பாதையில் இருந்த ஒவ்வொரு ராஜ்யத்தையும் கை பற்றினோம். ஒவ்வொரு போரும் வித்தியாசமானவை. சில போர்களில் எங்கள் படை பலத்தையும் சில போர்களில் எங்கள் விவேகத்தையும் பயன்படுத்த வேண்டி இருந்தது. சில போர்கள் சில மணி நேரங்களிலே முடிவுற்றது, சில போர்கள் நாட்கள் என்ன, பல வாரங்கள் நீடித்தது. எங்களை எதிர்க்க நினைத்த ராஜ்யங்கள் நிலை குலைந்தன, அடிபணிய முடிவெடுத்த ராஜ்யங்கள் தப்பித்துக் கொண்டன.   

மாசிடோனியாவின் இளவரசன் தனது குதிரையுடன் அணிவகுக்கும் அந்த காட்சியே பல ராஜாக்களை கலங்கடித்தது.

ஒரு முறை நானும் என் இளவரசனும் எங்கள் பரம எதிரியான டாரியசின் அரசவைக்கு தூது சென்றோம். இப்போது நினைத்து பார்த்தால் அது எவ்வளவு பெரிய முட்டாள் தனமான யோசனை என்று புரிகிறது. என்ன செய்வது. அந்த நாட்களில் இளமையின் துள்ளலும், சாகசத்தை தேடி செல்லும் தைரியமும் மனதில் நினைத்ததை செய்து விட வேண்டும் என்னும் வேகமும் நிறைந்திருந்தன.

கோட்டையின் வாசலில் நான் காத்துக் கொண்டிருந்தேன். அந்த நள்ளிரவில் வேக வேகமாய் ஓடி வந்த என் இளவரசன் “நண்பா கிளம்பு நான் யாரென கண்டு பிடித்து விட்டார்கள், என்னை கொல்ல ஒரு படையே வந்துக் கொண்டிருக்கிறது” என்று கூறினான். அந்த வார்த்தைகளில் பயத்தையும் தாண்டி ஆர்வமும் உற்சாகமும் கலந்திருந்தது. மின்னல் வேகத்தில் அங்கிருந்து நான் ஓட தொடங்கினேன். பல மணி நேர ஓட்டத்திற்கு பின் ஒரு உறைந்த நதியை வந்தடைந்தோம். தொட்டாலே நொறுங்கி விடும் அளவிற்கு மெல்லிய பனி நதியின் மேல் பரப்பில் படர்ந்திருந்தது. ஒன்று எதிரி படைகளிடம் பிடிபட்டு கொல்லப்படுவது இல்லை இந்த உறைந்த நதியில் மாட்டி உயிரை விடுவது. நாங்கள் அந்த நதியை தேர்ந்தெடுத்தோம். நான் மென்மையாய் அந்த பனி படலத்தில் காலடி எடுத்து வைத்தேன். என் ஒவ்வொரு அடியிலும் சிறிது சிறிதாய் நொறுங்கிய அந்த பனி பாதி வழியில் முற்றிலும் நொறுங்கி போனது. நல்ல வேலையாக என் வேகத்தாலும் விவேகதாலும் நாங்கள் அன்று உயிர் பிழைத்தோம். எங்களை துரத்தி வந்த வீரர்கள் நதியை கடக்க முடியாமல் அக்கரையிலே சிக்கிக் கொண்டனர். அதை கண்டு நாங்கள் இருவரும் குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தோம். அந்த இரவை மறக்கவே முடியாது,  

கிட்டத்தட்ட மொத்த ஐரோப்பாவையும் பெர்சியாவையும் வெற்றிக் கொண்ட பின் நாங்கள் இந்தியாவை அடைந்தோம். இத்தனை நாட்களாய் போர்களை சந்தித்த எங்கள் படைவீரர்கள் சோர்ந்து கலைப்புற்றனர்.

இதுவரை நாங்கள் கண்ட போர்களை விட இந்திய மண்ணில் நாங்கள் கண்ட போர் முற்றிலும் வித்தியாசமாய் இருந்தது, இந்திய மன்னன் போரஸின் படைகளில் யானை சிறுத்தை என பயிற்றுவிக்கப்பட்ட பல இனம் தெரியா மிருகங்கள் இருந்தன. அவைகளுக்கு எம் படைகளால் ஈடு கொடுக்க முடியவில்லை.

எனவே இது வரை உலகம் கண்டிராத ஒரு போர் தந்திரத்தை நாங்கள் பிரயோகித்தோம். முந்தைய போர்களில் நாங்கள் கொள்ளை அடித்த வெண்கல சிலைகளுக்கு மனித உடைகளை அணிவித்து அவற்றை நெருப்பூட்டி சூடக்கினோம். பின்னர் அந்த சிலைகளை போர்களத்தில் முன்னிலையில் நிறுத்தினோம். அந்த மிருகங்கள் அவைகளை எதிரிகள் என நினைத்து சீறி பாய்ந்தன. சூடு அவற்றின் கைகால்களையும் வாய்களையும் சுட்டு பொசுக்கியது. வந்த வேகத்தில் அனைத்தும் தங்கள் கூண்டுகளுக்கு திரும்பி சென்றன. பின்னர் என்ன வெற்றி எங்கள் வசம் ஆனது.

ஆனால் அந்த போர்களமே என் கடைசி சாகசமாய் முடிந்தது. போரில் பலத்த காயமடைந்தேன். வலி தாங்க முடியாமல் போர்களத்திலே சரிந்து விழுந்தேன். என் நிலைமையை கண்டதும் என்னை நோக்கி ஓடி வந்தான் என் இளவரசன். அவன் தங்க நிற கண்களில் சொல்லி முடியா துயரம், கட்டுக் கடங்காத கண்ணீர், சூரியனை போன்ற பிரகாசமான அவன் முகத்தில் விளக்க முடியா சோகம் – பல நூறு அரசர்களை தோற்கடித்து வெற்றி வாகை சூடிய மாமன்னனாய் அல்ல தன் உயிர் நண்பனை இழக்கும் தருவையில் கலங்கி நின்ற ஒரு இளைஞனாய் மாறினான் என் இளவரசன். வேக வேகமாய் அவனும் மற்ற வீரர்களும் என்னை பாதுகாப்பான இடத்திற்கு தூக்கி சென்றனர். பல மணி நேர வைத்தியம் கூட என்னை காப்பாற்ற முடியவில்லை. என்னை இருக்கமாய் அனைத்துக் கொண்ட என் இளவரசன் மென்மையாய் என் கழுத்தை தடவி கொடுத்தான். அவன் கரங்களிலே என் உயிர் பிரிந்தது.

என்னை அருகில் இருந்த நகரத்தில் அடக்கம் செய்த என் இளவரசன், அந்த நகரத்திற்கு என் பெயரையே சூட்டினான். அத்துணை அரிதானவன் நான்.

இந்நேரம் நான் யாரென கண்டு பிடித்திருப்பீர்களே. ஹாஹா

நான் வேறு யாருமில்லை, அலெக்ஸாண்டர் தி கிரேடின் தோழனும் துனைவனுமான அசாதாரண குதிரை புஸிபாலஸ்

ஒரு வேலை நான் மட்டும் என் இளவரசனை சந்தித்திருக்க விட்டால், இந்நேரம் ஏதோ ஒரு வயலில் வேலைக்காரணாகவோ இல்லை எதாவது ஒரு பணக்காரன் வீட்டு கொட்டகையில் அவனின் செல்ல பிராணியாகவோ இருந்திருப்பேன்.

என் இளவரசனும் பத்தோடு பதினொன்றாக பெயர் தெரியாத இளவரசனாய் வாழ்ந்து மடிந்திருப்பான்.

ஆனால் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு பிடித்தோம். ஒருவருக்கு ஒருவர் துணையாய், ஒரே கனவை நோக்கி முன்னேறினோம். ஒருவர் மேல் ஒருவர் அளவுக்கடந்த நம்பிக்கை கொண்டிருந்தோம், மரணத்தின் விளிம்பில் கூட ஒருவரை ஒருவர் கெட்டியாய் பிடித்திருந்தோம்.

என் இளவரசனை போன்ற ஒரு மாமனிதனை நீங்கள் சந்திப்பது கடினம் தான். ஆனால் நீங்கள் தேடும் அந்த நண்பனை நீங்கள் சீக்கிரம் சந்திப்பீர்கள் என நம்புகிறேன்.

உங்கள் போராட்டங்களில் உங்களின் உற்ற துணையாய்

உங்கள் தோல்விகளில் உங்களை தாங்கி பிடிக்கும் தூணாய்

உங்கள் வெற்றிகளை கொண்டாடும் நண்பனாய்

உங்கள் கனவுகளை நினைவாக்கும் அற்புத ஜீனியாய்

உங்களின் அந்த அசாதாரண மனிதனை நீங்களும் நிச்சயம் கண்டு பிடிப்பீர்கள்.

ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே

– பைபிள்

வணக்கம்

கதாசிரியரிடம் இருந்து

என்ன நண்பர்களே கதை எப்படி இருக்கு?

உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நம்புறேன்.

ஒரு காலத்துல நானும் உங்கள மாதிரியே தான், தனிமையில் இனிமை கண்டவன். கூட்டு முயற்சியிலே எனக்கு எப்பவும் நம்பிக்கை இருந்ததே இல்லை. பள்ளியிலே கூட ஒன்னா சேர்ந்து பண்ண வேண்டிய ப்ராஜெக்ட் கூட நானே தனியா செஞ்சிடுவேன். மத்தவங்கள நம்பி விட்டதே இல்லை.

ஆனா சமீபத்துல ஒரு கல்லூரி கிளப்காக யாருனே தெரியாத சிலரோட சேர்ந்து வேலை செய்ய வேண்டிய நிலைமை வந்துடுச்சி. நாங்க ஒன்னா இருந்த அந்த சில நாட்கள் எனக்கு ஒரு மிக பெரிய பாடத்த கத்துக் குடுத்துச்சி. நமக்கு எல்லாமே தெரிஜிருக்கணும்னு அவசியமே இல்லை. நம்மள சுத்தி உள்ளவங்க மேல நம்பிக்கை வச்சா போதும். எல்லாமே சரியா நடக்கும். நாம விழுந்தா அவங்க தூக்கி விடுவாங்க, அவங்க தவறு செஞ்சா நாம திருத்துவோம். ஒரு கூட்டு முயற்சியின் பலத்தை நான் அப்போ தான் புரிஞ்சிகிட்டேன்.

நீங்களும் இந்த கதை மூலம் அதை புரிஞ்சிருப்பீங்கனு நம்புறேன்.

அடுத்த கதை நவம்பர் 8 வெளியாகும்.

நீங்க என்ன இன்ஸ்டாகிராம்

https://www.instagram.com/?hl=en

இல்லை

பேஸ்புக்ல

https://www.facebook.com/I-am-a-Textrovert-104311854657727/

கூட தொடரலாம்.

மறக்காம உங்கள் கருத்துக்களை பதிவு செயுங்க.

அந்த பாலோ பட்டனை கொஞ்சம் தட்டி விடுங்க.

அடுத்த கதையில் சந்திக்கலாம் 🙂

Posted in சிறுகதை, தமிழ், fiction, History, inspirational, short story, tamil

வரலாற்றில் இடம் பிடிக்க – பாகம் I

என்ன? என் அழகுல மெய் மறந்துட்டீங்க போல? ஹாஹா ஆமா. இது நான் தான். இது என்னுடைய கதை தான்.

என்ன அப்படி பார்க்கிறீங்க? ஏன்? ஒரு குதிரை ஹீரோவா இருக்க கூடாதா என்ன? எத்தன வருஷம் ஆனாலும் இந்த மனுஷங்க மட்டும் மாறவே மாட்டங்க.

இந்த நொடி வரைக்கும் கிட்டதட்ட 107 பில்லியன் மனிதர்கள் இந்த உலகத்துல வாழ்ந்திருக்காங்க. ஆனா அவர்களோட கனவுகளும் ஆசைகளும், எண்ணங்களும் வெற்றிகளும், சொந்த பந்தங்கள் எல்லாம் அவங்களோடு அழிஞ்சி போச்சு. அவங்க வாழ்ந்ததற்கான அறிகுறியே இல்லாம போய்டுச்சி.

ஆனா இந்த சாதாரண மனிதர்களை தாண்டி சில அசாதாரண மனிதர்களும் இருந்தாங்க. இந்த உலகத்தையே மாற்ற முடியும்னு நம்பி அதை செஞ்சும் காட்டிய சில மாமனிதர்கள். எதையும் அடைய முடியும் என்னும் நம்பிக்கையும், எல்லாத்தையும் எதிர்க்கொள்ளும் தைரியமும் நிறைஞ்ச சூப்பர் ஹீரோக்கள் அவங்க. நூற்றாண்டுகளா அவர்களோட கதைகள் வழி வழிய சொல்லப்பட்டு வரலாற்றோட பக்கங்கள்ல இடம் பிடிச்சிருக்கு. இன்றைக்கும் கூட நீங்களும் நானும் அந்த அசாதாரண மனிதர்களை ஞாபகம் வச்சிருக்கோம். அவங்கள போல வாழ ஆசைபட்றோம்.

இதை விட ஆச்சரியம் என்ன தெரியுமா? மனிதர்களால் எழுதப்பட்ட வரலாற்றோட பக்கங்கள்ல சில விலங்குகளும் இருக்காங்க. மனிதர்கள் கால காலமா விலங்குகள பார்த்து பொறமை பட்டதுண்டு. எங்களோட பன்முகத்தன்மைய அவங்களால பொறுத்துக்க முடியல. ஆனா அப்படிப்பட்ட மனிதர்களால கூட இந்த அதிசய விலங்குகள் வரலாற்றில் இடம் பிடிப்பத தடுத்து நிறுத்த முடியல. அவ்வளவு பவர் எங்களுக்கு. 

அப்படி இடம் பிடித்த சில விலங்குகள்ல மிக முக்கியமானவன் நான் தான். நான் வாழ்ந்த காலத்துல இருந்து பல நூறு ஆண்டுகள் கழிச்சி வாழற நீங்க கூட என் கதைய கேட்டதும் “ஓ எனக்கு இவன தெரியும். நான் பல தடவ கேள்வி பட்டிருக்கேன்” அப்படின்னு சொல்லுவீங்க. அவ்வளவு முக்கியமானவன் நான்.

என்னுடைய கதைய பல மனிதர்கள் சொல்லி கேட்டிருப்பீங்க. ஆனா முதல் முதல்ல நானே என் கதைய சொல்ல போறேன்.

என்ன ஆர்வத்தை கட்டு படுத்த முடியலையா? சரி வாங்க கதைக்குள்ள போவோம்.

முன்னொரு காலத்தில் பெர்சியாவின் வளமான புல் வெளிகளில் லாமோமென்டியோ என்னும் குதிரை வர்த்தகர் வாழ்ந்து வந்தார். அவரது பண்ணையில் உலகின் பல மூலைகளில் இருந்து கொண்டு வரப்பட்ட உயர் வகை குதிரைகள் இருந்தன. அங்கு தான் என் வாழ்க்கை தொடங்கியது. தொலை தூர கிரகங்கள் விண்ணை அலங்கரித்த அந்த அற்புத இரவில் தான் நான் பிறந்தேன். என் தந்தையின் துணிச்சலும் என் தாயின் இணையில்லா அழகும் கலந்த கலவையாய் இறைவனின் மிகச் சிறந்த படைப்பாய் வளம் வந்தவன் நான். அந்த புல் வெளிகளில் தான் யுத்த கலைகளில் பயிற்சி பெற்று மாபெரும் வீரனாய் மாறினேன்..

என்னை போன்ற ஒரு வீரன் மனிதர்களுடன் ஏன் வாழ்கிறான் என்று தானே யோசிக்கிறீர்கள். ஹாஹா இதே கேள்வியை பலர் என்னிடம் கேட்டதுண்டு. ஒவ்வொரு முறையும் என் பதில் ஒன்று தான். யாராவது உங்களிடம் வந்து நான் உன்னை பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன். உனக்கு 3 வேலையும் மறக்காமல் உணவளிக்கிறேன். நீ தங்க இடம் தருகிறேன். அந்த இடத்தை கூட நானே சுத்தம் செய்கிறேன். ஆனால் பதிலுக்கு என்னை தூக்கி கொண்டு மட்டும் செல்வாயா? என்று கேட்டால் நீங்கள் கூட ஏற்றுக்கொள்வீர்கள் தானே. அதையே தான் நாங்களும் செய்தோம். ஏதோ எங்களை அடிமைபடுத்தி விட்டதாக வீண் பெறுமை பேசுகிறார்கள் இந்த மனிதர்கள். ஆனால் உண்மையில் அவர்கள் தான் எங்களுக்கு அடிமைகள் போல் வேலை செய்கிறார்கள். சரி அது போகட்டும்

அந்த புல் வெளிகளில் ஒரு கவலையும் இன்றி சுற்றி வந்த நாட்களை என்றுமே மறக்க முடியாது. அன்பும் அரவணைப்பும் நிறைந்திருந்த இடம் அது. என் வாழ்வின் மிக சிறந்த நாட்கள் அவை.

அந்த நாட்களில் தான் எனக்கே முட்டாள் தனமாய் தோன்றிய ஒரு குறிக்கோளை அடைய வேண்டும் என்று முடிவெடுத்தேன். எப்படியாவது வரலாற்றில் இடம் பெற வேண்டும். வரும் தலை முறை என் சாகசங்களை கண்டு வியக்க வேண்டும். என் பெயர் பாட புத்தகங்களில் இடம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் பெயர் மக்கள் மனதில் உள்ளவரை நான் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறேன் என்று நான் முழு மனதுடன் நம்பினேன்.

ஆனால் எப்படி? என்ற கேள்விக்கு மட்டும் விடை கிடைக்கவில்லை.    

வருடங்கள் உருண்டன, என் புகழ் எட்டு திசைக்கும் பரவியது. என்னை சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் பல மன்னர்களும் வீரர்களும் முயற்சித்தனர். ஆனால் ஒருவராலும் என்னை அடக்க முடியவில்லை.

“அடங்கா மிருகம்” என்ற பட்டத்தைப் பெற்ற நான் இறுதியில் மாசிடோனியாவின் மன்னன் பிலிப்பின் நாட்டை வந்தடைந்தேன்.

“இந்த மிருகத்தை அடக்கக்கூடிய மனிதன் உலகையே வென்று மிகபெரிய போர்வீரர்களையும் அடிபணிய செய்வான்” என்று ராஜாவின் சூத்திரதாரி டெல்பியால் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது.

விரைவில் நான் மாசிடோனியாவின் மிகச்சிறந்த மனிதர்களால் சூழப்பட்டேன். என் ஆற்றலைச் சமாளிக்க அவர்கள் தங்களால் முடிந்தவரை முயன்றனர், அணைத்து தந்திரங்களையும் முயற்சித்தனர், ஆனால் அவர்களால் என் வலிமைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

கூட்டத்திலிருந்து ஒரு சிறுவன் தோன்றினான். புன்னகையுடன் என்னை நோக்கி நடந்து வந்தான். சிங்கத்தைப் போன்ற கம்பீரம் அவன் புன்னகையில் ஒளிந்திருந்தது. அவனை கண்ட அந்த நொடியில் என் பிரபஞ்சம் முழுவதும் ஸ்தம்பித்து நின்றது. எங்கும் விளக்க முடியா அமைதி. தேனிலே முக்கி எடுத்த அவனது பழுப்பு நிற கண்கள் சூரிய ஒளியில் வைரமாய் காட்சி அளித்தது. உலகையே வெல்லும் சக்தி, சாதிக்க வேண்டும் என்னும் வெறி,  நிச்சயம் வெற்றி அடைவேன் என்னும் நம்பிக்கை, வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும் என்னும் ஆர்வம் அவன் கண்களில் மிளிர்ந்தது. அந்த கண்களில் என்னையே நான் மீண்டும் ஒரு முறை கண்டேன்.

அவன் மென்மையாய் என் கடிவாளத்தை பிடித்து அந்த கூட்டத்தை விட்டு தூரமாய் நடத்தி சென்றான். என் தலையை தடவி கொடுத்து “நீயும் நானும் ஒரே மாதிரியானவர்கள். இந்த உலகை ஆள பிறந்தவர்கள். இந்த பயணத்தில் என்னுடன் சேர்ந்து கொள் நண்பா” என்று கூறினான். நான் இத்தனை காலமாய் தேடிய என் கேள்விக்கான பதில் இவன் தான் என்று அப்போது தோன்றியது. என்னை சொந்தம் கொண்டாட தகுதியானவன் இவன் தான் என்று முடிவு செய்தேன். என் சேணத்தில் ஏறி உட்கார்ந்தான். அந்த நாள் அந்த சிறுவன் என்னை அடக்கி விட்டான். உலகை வெற்றி கொள்ளும் எங்கள் பயணத்தில் அது தான் முதல் படி.

தொடரும்

கதாசிரியரிடம் இருந்து

வணக்கம் நண்பர்களே

கதைய படிச்சதும் “அந்த சிறுவன் ………….. தானே, அந்த குதிரை ………….. தானே” அப்படின்னு சொல்லிகிட்டு இருக்கீங்க போல.

இருந்தாலும் நம்ம ஹீரோவே அவரோட பெயர சொல்ற வரைக்கும் காத்திருப்போம்.

மறக்காம உங்க கருத்துக்கள, எண்ணங்கள, கேள்விகள பதிவு செயுங்க.

அடுத்த பாகம் அடுத்த ஞாயிறு 0.00 வெளியாகும்.

அதுவரை காத்திருங்கள் 🙂