மாற்றம் என்ன அவ்வளவு முக்கியமா?
வழக்கமான வாழ்க்கையில் இன்பத்தையும் ஆறுதலையும் காணும் வித்தியாசமான மனிதர்களில் நானும் ஒருத்தி. அறிமுகமானவர்களின் முகத்தை காண்பதிலும் நன்கு பழக்கப்பட்ட வீதிகளிலும் ஆறுதல் அடையும் மனுஷி நான்.
மாற்றத்தை கண்டு அஞ்சும் ஒருத்தி.
“என்னை போன்றவரா நீங்கள்?”
எனக்கு பரிச்சயம் பிடிக்கும். அதே வழக்கமான காலை, அதே பால்காரனின் குரல், வானொலியில் அதே பழைய பாடல், என் அண்டை வீட்டுக்காரர்களின் அதே குறட்டை சத்தம், எனக்காக நான் உருவாக்கிய இந்த சின்ன உலகில் சந்தோஷமாய் வளம் வந்தவள் நான்.
ஆனால் ஏன்? என் கணினித் திரையில் ஒளிரும் சொற்களைக் கண்டு குமுறினேன்.
“திருமதி கேட்டி தாம்சன்,
எங்கள் நிறுவனமான செயின்ட் இன்கில்., 36 வருடங்கள் இடை விடாது பணியாற்றி, எங்கள் வளர்ச்சிக்கு உதவிய உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நீங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், எங்கள் நிறுவனத்தின் வாயில்கள் உங்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும்
உங்கள் ஓய்வு காலத்தை மகிழ்ச்சியுடன் செலவழிக்க உங்களை வாழ்த்துகிறோம்.
அன்புடன்,
செயிண்ட் இன்க்.,
எனது நிறுவனத்தில் நான் செலவிட்ட அந்த மணி துளிகள், அதின் அறைகளுக்கிடையே ஒளிந்திருந்த பழக்கப்பட்ட முகங்கள், ஒளிரும் திரைகளும் – என் வாழ்நாளின் மிக பெரிய பாகங்கள்.
36 வருடமாய் நான் சிற்பமாய் செதுக்கிய என் வாழ்க்கை ஒரே நாளில் தலை கீழாய் மாறி போனது,
♫ லா லா லலலலா ♫ என் தொலைபேசியின் குரலைக் கேட்டு புன்னகைத்தேன். 10 ஆண்டுகளாக என் ரிங்டோன் கூட மாறவில்லை.
“அம்மா, அடுத்த வாரம் உங்களுக்கு பிளைட்(விமானம்). சின்ன குழந்தை மாதிரி அடம்பிடிக்கம சீக்கிரம் பேக்கிங் செய்ய ஆரம்பிங்க”
என் அன்பு மகனின் குரல். நான் அறியாத மொழி பேசும், நான் அறியாத மனிதர்கள் வாழும், நான் அறியாத அந்த நாட்டிற்கு வர அழைப்பு விடுத்தது.
எனது மிக பெரிய பயத்தை நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது – மாற்றம்.
என் போராட்டம் வெற்றி பெறுமா? அந்த ஒரு கேள்விக்கு மட்டும் விடை எங்குமே கிடைக்கவில்லை.
எனது மொத்த வாழ்க்கையையும் அந்த சிறிய பழுப்புப் பெட்டிகளில் அடைக்கத் தொடங்கியபோது தான், எனது மதிப்புமிக்க உடைமைகளில் பெரும்பாலானவை பல முறை படித்த தேய்ந்த புத்தகங்களும், குப்பைகளாய் தோன்றிய டிரிங்கெட்டுகளுமே எனப் புரிந்தது. ஆனால் என் மங்கின கண்களுக்கு தான் தெரியும் அதில் ஒளிந்திருக்கும் அற்புத நினைவுகள் – என் வாழ்க்கையின் புதையல்கள்.
ஆச்சரியப்படும் விதமாக, தூசி படிந்த அந்தக் குவியல்களுக்கு அடியில் ஒரு மகத்தான புதையல் வெளிவந்தது, என் பழைய டைரி, அதற்க்கு கிட்ட தட்ட என் வயது. ஹாஹா.
படிந்திருந்த தூசியை உதறிவிட்டு, என் படுக்கையின் அரவணைப்பில் என் கடந்த காலத்திற்குள் பயணிக்க தயாரானேன்.
அன்புள்ள டயரி
எனக்கு குழந்தைகளை பார்த்தாலே வெறுப்பா வருது.
ஒரே நேரத்தில எப்படி தான் அழுதுகிட்டு, கத்திக்கிட்டு, கூச்சல்போட்டுகிட்டே அதுங்களால ஓட முடியுதோ!
பக்கத்து வீட்டு ஜெனி பாப்பா இருக்காளே, அம்மா அவள பார்த்துக்க சொன்னங்க. அவ என்னனா தட்டை உடைச்சிட்டா, சுவற்றிலே கிறுக்கி வச்சிட்டா, என் பொம்மைய கிழிச்சிட்டா. என்னையே அழ வச்சிட்டா.
நான் வளர்ந்து பெருசானதும் குழந்தைகள கிட்டயே சேர்க்க மாட்டேன்.
என் மேசையை அலங்கரித்த படம் என் கண்களில் பட்டது. என் 5 வயது மகனை நான் தூக்கிக் கொண்டுடிருக்கும் படம் அது. என் முகத்தில் அப்படி ஒரு புன்னகை. லாட்டரி வென்ற மனிதனை விட, உலகின் முதல் பணக்காரனை விட மகிழ்ச்சியான ஒரு புன்னகை.
என் செல்ல மகன் எப்படியோ என் வாழ்க்கையின் வெளிச்சமாய் மாறி போனான்.
அன்புள்ள டயரி
இந்த வயசானவங்கலாம் எப்படி தான் இந்த காபியை குடிக்கிறாங்களோ?
சுட சுட கசப்பா இருக்கு. அதை போய் காசு குடுத்து வாங்கி குடிக்கிறாங்க.
நான் வளர்ந்து பெருசானதும் இந்த காப்பிய உதறி தள்ளிட்டு தினமும் ஒரு ஐஸ்கிரீம் வாங்க போறேன்.
என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. என்னை சுற்றிக் கிடந்த காபி டம்பளர்கள் என்னை காட்டிக் கொடுத்தன. அதோடு ஒரு நாள் கூட எனக்கு நானே ஐஸ்கிரீம் வாங்கியதாக நினைவே இல்லை. ஹாஹா.
அன்புள்ள டயரி,
எப்படி மத்தவங்க கிட்ட பேசுறது. கொஞ்சம் சொல்லிதாயேன்.
மத்தவங்கள பார்த்ததும் கை எல்லாம் வேர்க்குது, நெஞ்சு பட படக்குது. வாய் ஒன்னா ஒட்டிக்கிட்டு வார்த்தை வெளிய வரமாட்டிங்கிது
இன்னைக்கு முதல் நாள் கல்லூரியிலே நான் கிட்டத்தட்ட அழுதுட்டேன் தெரியுமா.
இப்படியே போன எனக்கு நண்பர்களே கிடைக்கமாட்டங்க போல. நான் தனி மரமா சுத்த வேண்டியது தான்.
பேச பயந்த நான் எப்படியோ வாயை மூடவே மூடத மூதாட்டியாய் மாறி போனேன். நான் சொன்னால் நம்பமாட்டீர்கள். என் தெருவில் உள்ள டீகடைக்காரர், பால்க்காரர், பேப்பர் போடுபவர், போக்குவரத்து காவலாளி, என் தெருவில் வசிக்கும் 20 குடும்பங்கள் என எல்லோரும் எனக்கு நண்பர்கள்.
அன்புள்ள டயரி,
உனக்கு கிருஷ்யை நினைவிருக்கா?
அதான் வேதியல் ஆய்வகத்துல என் கூட்டாளி..
என் தைரியத்தை எல்லாம் திரட்டி காதலர் தினத்துல என் காதல அவன்கிட்ட சொல்லலாம்னு போனேன். அப்போ அவன் நண்பர்களோட பேசிட்டு இருந்தத ஒட்டு கேட்டேன்.
“ஏய் கிருஷ், என்ன எப்போ பார்த்தாலும் கேட்டி கூடவே சுத்திகிட்டு இருக்கே? சரி இல்லையே…. என்ன காதலா?” அவன் நண்பன்ல ஒருத்தன் கேட்டான்.
“கேட்டியா? காதலா? அவ முகத்தை பார்த்தாலே எவனா இருந்தாலும் தலை தெருச்சி ஓடிடுவான். அப்படி இருக்க அவளை போய் நானா.. வாய்ப்பே இல்லை.
நான் கொஞ்ச சிரிச்சி பேசுனதுனாலே என் வேலையையும் ஹோம்வர்க்கையும் (வீட்டு பாடத்தையும்) அவளே எழுதி முடிச்சிட்டா. முட்டாள் பொண்ணு. ஈசியா ஏமாற்றலாம்” சிரித்துக் கொண்டே கூறினான் கிருஷ்.
அந்த முட்டாள்… படுபாவி … நான் அவனைக் கொல்ல போறேன்.
ஆனா அவன் சொல்றதும் சரி தான். என்னை யாருக்கும் பிடிக்காது.
அந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது. எப்படி மறக்க முடியும். இரவு முழுவதும் கண்ணீரில் அல்லவா கழித்தேன்.
ஆனால் காதல் என்னை கட்டி அணைத்தது, நான் ஜேசனை கண்ட அந்த நாளில். ஜேசனை – என் காதல் கணவன், என் இளவரசன். அவரோடு நான் கழித்த 25 ஆண்டு திருமண வாழ்க்கை சொர்க்கமாய் தோன்றியது.
என் ஜேசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகத்தை விட்டு மறைந்து போனான்.
தேய்ந்த அந்த பக்கங்களுக்குள், அந்தக் கதைகளுக்குள், மனித பார்வையில் மறைந்திருந்த ஒரு உண்மையை நான் உணர்ந்தேன்.
என்னையே அறியாமல் என் வாழ்க்கை மாறிவிட்டது
கேட்டியாகிய நான்
குழந்தைகளை வெறுக்கும் ஆறு வயது சிறுமியும் இல்லை
காபியை வெறுத்த பெதும்பையும் இல்லை
கூச்சத்தில் தலை குனிந்த மாணவியும் இல்லை
காதல் தோல்வியில் கண்ணீர் விட்ட மங்கையும் இல்லை
என் மிக பெரிய எதிரியான மற்றம் எப்படியோ இத்தனை நாட்களாய் என் உற்ற நண்பனாய் எனக்கே தெரியாமல் என்னோடு வந்துள்ளான்.
இதை எல்லாம் உணர்ந்த பிறகு – புது நாடு, புது மொழி, புது முகங்கள், அந்த மாற்றமும் நன்றாக தான் இருக்கும் என தோன்றுகிறது.
நிறம் மாறும் பருவங்களே
திசை மாறும் நினைவுகளே
நிலை மாறும் மேகங்களே
உலகம் சொல்ல மறுக்கும் உண்மையை சொல்லட்டுமா?
மாற்றத்தை கண்டு அஞ்சும் மனித இனம்
தன்னையே அறியாமல்
மாறும் பருவங்களை கட்டி அனைக்கிறது.
முற்றும்
கதாசிரியரிடம் இருந்து,
அன்பு வாசகர்களே,
கதை எப்படி இருக்கு?
எல்லாரும் நல்ல இருக்கீங்கனு நம்புறேன் 🙂
கதை பிடிச்சிருந்த ஷேர் பண்ணுங்க , பாலோ பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க
இந்த எழுத்தாளனுக்கு உங்க அன்ப தெரிவீங்க.
அடுத்த கதை 14.2.2021 அன்று ஞாயிறு 0.00 ist மணிக்கு வெளியாகும்.
மறக்காம படிங்க.
இது போன்ற கதைகளை படிக்க இந்த தொகுப்பு பட்டனை கிளிக் செய்யுங்க.
அடுத்த வாரம் சந்திப்போம் நண்பர்களே!