அன்றிலிருந்து நானும் அந்த சிறுவனும் இணை பிரியா நண்பர்களாய் மாறினோம். மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு உறவு அது. இந்த பிரபஞ்சத்தின் மொழியை நாங்கள் கற்று கொண்டும். வார்த்தைகள் தேவை படவில்லை, வெறும் பார்வை ஒன்றே ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ள போதுமானதாய் தோன்றியது. நண்பனாய், துணைவனாய், சகோதரனாய் பிரிக்க முடியாத சக்தியாய் மாறினோம்.
அந்த சிறுவன் மாசிடோனியாவின் பட்டத்து இளவரசன் என்று அறிந்துக் கொண்டேன். அவன் ஒரு திறமையான வாள்வீரன், வில் வித்தையில் வல்லவன், தோற்கடிக்க முடியாத போராளி, உலகப் புகழ்பெற்ற அறிஞரான அவன் ஆசிரியர் அரிஸ்டாட்டிலின் மிக சிறந்த மாணவன், ஈடு இணை இல்லா புத்திசாலி. இப்படி அவனை பற்றி கூறிக் கொண்டே போகலாம்.
நானும் எதற்கும் சலித்தவன் இல்லை. காற்றை கிழித்துக் கொண்டு செல்லும் அளவுக்கு வேகம் கொண்டவன், போர்களத்தில் மரணம் கண் எதிரே நின்றாலும் அதனை தைரியமாய் எதிர்க் கொண்டு எதிராளியை கொன்று குவிக்கும் ஆற்றல் பெற்றவன். உலகம் கண்டிராத வலிமை மிக்க போர் ஆயுதம் நான்.
ஒலிம்பிக்ஸ் தான் நாங்கள் ஒன்றாய் எதிர்க்கொண்ட முதல் சவால். இந்த உலகிற்கு எங்கள் திறமையை வெளிபடுத்தக் கிடைத்த முதல் வாய்ப்பு. நாங்கள் தேரோட்ட பந்தையத்தில் கலந்து கொண்டோம். பல தேசத்து வீரர்களும் இளவரசர்களும் எங்களுடன் போட்டியிட்டனர்.
என் இளவரசன் என்னிடம் வந்து “நண்பா நாம் நிச்சயம் வென்று விடுவோம், நாம்மால் இதை நிச்சயம் சாதிக்க முடியும்” என்று பிரகாசமான புன்னகையுடன் கூறினான்.
விசில் ஊதப்பட்ட அந்த நொடியில் எல்லா தேர்களும் சீறி பாய்ந்தன. நானும் பாலைவன புயலை போல் பாதையில் இருந்த தடைகளை எல்லாம் தூக்கி எறிந்து சீறி பாய்ந்தேன். நாங்கள் இருவரும் முன்னிலையில் ஓடிக் கொண்டிருந்த சமயத்தில் பின்னில் இருந்து வந்த ஈட்டி என் இளவரசனின் கைகளை சிராய்த்து சென்றது. அந்த ஈட்டி வேறு யாருடையதும் அல்ல, எங்கள் பின்னால் வந்துக் கொண்டிருந்த இளவரசன் நிக்கோலசுடையது. “நண்பா கொஞ்சம் வேகத்தை குறை” என்று என் இளவரசன் கூறினான். “இளவரசன் பயந்துவிட்டானோ? நிச்சயம் இருக்காது” எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அவன் மீது முழு நம்பிக்கை வைத்து என் வேகத்தை சற்றே குறைத்தேன். எங்களை முந்தி சென்றான் நிக்கோலஸ். எங்களை பயமுறுத்தி விட்டதாக நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான். அந்த நொடியில் என் இளவரசன் தன் வில்லை எய்தான். அம்பு நிகோலசின் முதுகில் பாய்ந்தது. அவன் தேர் நிலை தடுமாறி கவிழ்ந்தது. பிறகு என்ன, வெற்றி எங்கள் வசமானது.
ஆலிவ் இலைகளால் ஆனா கிரீடம் எங்கள் சிரசை அலங்கரிக்க நாங்கள் எங்கள் தாய் நாட்டிற்கு திரும்பினோம். ஒலிம்பிக்ஸில் வெற்றி வாகை சூடிய இளவரசனையும் அவன் குதிரையையும் காண நாட்டு மக்கள் ஆர்வமாய் நகர வாசலில் காத்திருந்தனர். நாடே விழா கோலம் பூண்டிருந்தது. எங்கள் புகழ் பல நாடுகளுக்கு காட்டு தீ போல் பரவியது.
என் இளவரசனின் பத்தொன்பதாம் வயதில் உலகை வெல்வதற்கான எங்கள் பயணம் தொடங்கியது. அணைத்து போர் கலைகளையும் கற்று தேர்ந்த எம் நாட்டின் தலை சிறந்த வீரர்கள் அடங்கிய படையுடன் நாங்கள் முன்னேறினோம்.
எங்கள் பயணம் மசிடோனியாவில் தொடங்கி இந்தியா வரை சென்றது. எங்கள் பாதையில் இருந்த ஒவ்வொரு ராஜ்யத்தையும் கை பற்றினோம். ஒவ்வொரு போரும் வித்தியாசமானவை. சில போர்களில் எங்கள் படை பலத்தையும் சில போர்களில் எங்கள் விவேகத்தையும் பயன்படுத்த வேண்டி இருந்தது. சில போர்கள் சில மணி நேரங்களிலே முடிவுற்றது, சில போர்கள் நாட்கள் என்ன, பல வாரங்கள் நீடித்தது. எங்களை எதிர்க்க நினைத்த ராஜ்யங்கள் நிலை குலைந்தன, அடிபணிய முடிவெடுத்த ராஜ்யங்கள் தப்பித்துக் கொண்டன.
மாசிடோனியாவின் இளவரசன் தனது குதிரையுடன் அணிவகுக்கும் அந்த காட்சியே பல ராஜாக்களை கலங்கடித்தது.
ஒரு முறை நானும் என் இளவரசனும் எங்கள் பரம எதிரியான டாரியசின் அரசவைக்கு தூது சென்றோம். இப்போது நினைத்து பார்த்தால் அது எவ்வளவு பெரிய முட்டாள் தனமான யோசனை என்று புரிகிறது. என்ன செய்வது. அந்த நாட்களில் இளமையின் துள்ளலும், சாகசத்தை தேடி செல்லும் தைரியமும் மனதில் நினைத்ததை செய்து விட வேண்டும் என்னும் வேகமும் நிறைந்திருந்தன.
கோட்டையின் வாசலில் நான் காத்துக் கொண்டிருந்தேன். அந்த நள்ளிரவில் வேக வேகமாய் ஓடி வந்த என் இளவரசன் “நண்பா கிளம்பு நான் யாரென கண்டு பிடித்து விட்டார்கள், என்னை கொல்ல ஒரு படையே வந்துக் கொண்டிருக்கிறது” என்று கூறினான். அந்த வார்த்தைகளில் பயத்தையும் தாண்டி ஆர்வமும் உற்சாகமும் கலந்திருந்தது. மின்னல் வேகத்தில் அங்கிருந்து நான் ஓட தொடங்கினேன். பல மணி நேர ஓட்டத்திற்கு பின் ஒரு உறைந்த நதியை வந்தடைந்தோம். தொட்டாலே நொறுங்கி விடும் அளவிற்கு மெல்லிய பனி நதியின் மேல் பரப்பில் படர்ந்திருந்தது. ஒன்று எதிரி படைகளிடம் பிடிபட்டு கொல்லப்படுவது இல்லை இந்த உறைந்த நதியில் மாட்டி உயிரை விடுவது. நாங்கள் அந்த நதியை தேர்ந்தெடுத்தோம். நான் மென்மையாய் அந்த பனி படலத்தில் காலடி எடுத்து வைத்தேன். என் ஒவ்வொரு அடியிலும் சிறிது சிறிதாய் நொறுங்கிய அந்த பனி பாதி வழியில் முற்றிலும் நொறுங்கி போனது. நல்ல வேலையாக என் வேகத்தாலும் விவேகதாலும் நாங்கள் அன்று உயிர் பிழைத்தோம். எங்களை துரத்தி வந்த வீரர்கள் நதியை கடக்க முடியாமல் அக்கரையிலே சிக்கிக் கொண்டனர். அதை கண்டு நாங்கள் இருவரும் குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தோம். அந்த இரவை மறக்கவே முடியாது,
கிட்டத்தட்ட மொத்த ஐரோப்பாவையும் பெர்சியாவையும் வெற்றிக் கொண்ட பின் நாங்கள் இந்தியாவை அடைந்தோம். இத்தனை நாட்களாய் போர்களை சந்தித்த எங்கள் படைவீரர்கள் சோர்ந்து கலைப்புற்றனர்.
இதுவரை நாங்கள் கண்ட போர்களை விட இந்திய மண்ணில் நாங்கள் கண்ட போர் முற்றிலும் வித்தியாசமாய் இருந்தது, இந்திய மன்னன் போரஸின் படைகளில் யானை சிறுத்தை என பயிற்றுவிக்கப்பட்ட பல இனம் தெரியா மிருகங்கள் இருந்தன. அவைகளுக்கு எம் படைகளால் ஈடு கொடுக்க முடியவில்லை.
எனவே இது வரை உலகம் கண்டிராத ஒரு போர் தந்திரத்தை நாங்கள் பிரயோகித்தோம். முந்தைய போர்களில் நாங்கள் கொள்ளை அடித்த வெண்கல சிலைகளுக்கு மனித உடைகளை அணிவித்து அவற்றை நெருப்பூட்டி சூடக்கினோம். பின்னர் அந்த சிலைகளை போர்களத்தில் முன்னிலையில் நிறுத்தினோம். அந்த மிருகங்கள் அவைகளை எதிரிகள் என நினைத்து சீறி பாய்ந்தன. சூடு அவற்றின் கைகால்களையும் வாய்களையும் சுட்டு பொசுக்கியது. வந்த வேகத்தில் அனைத்தும் தங்கள் கூண்டுகளுக்கு திரும்பி சென்றன. பின்னர் என்ன வெற்றி எங்கள் வசம் ஆனது.
ஆனால் அந்த போர்களமே என் கடைசி சாகசமாய் முடிந்தது. போரில் பலத்த காயமடைந்தேன். வலி தாங்க முடியாமல் போர்களத்திலே சரிந்து விழுந்தேன். என் நிலைமையை கண்டதும் என்னை நோக்கி ஓடி வந்தான் என் இளவரசன். அவன் தங்க நிற கண்களில் சொல்லி முடியா துயரம், கட்டுக் கடங்காத கண்ணீர், சூரியனை போன்ற பிரகாசமான அவன் முகத்தில் விளக்க முடியா சோகம் – பல நூறு அரசர்களை தோற்கடித்து வெற்றி வாகை சூடிய மாமன்னனாய் அல்ல தன் உயிர் நண்பனை இழக்கும் தருவையில் கலங்கி நின்ற ஒரு இளைஞனாய் மாறினான் என் இளவரசன். வேக வேகமாய் அவனும் மற்ற வீரர்களும் என்னை பாதுகாப்பான இடத்திற்கு தூக்கி சென்றனர். பல மணி நேர வைத்தியம் கூட என்னை காப்பாற்ற முடியவில்லை. என்னை இருக்கமாய் அனைத்துக் கொண்ட என் இளவரசன் மென்மையாய் என் கழுத்தை தடவி கொடுத்தான். அவன் கரங்களிலே என் உயிர் பிரிந்தது.
என்னை அருகில் இருந்த நகரத்தில் அடக்கம் செய்த என் இளவரசன், அந்த நகரத்திற்கு என் பெயரையே சூட்டினான். அத்துணை அரிதானவன் நான்.
இந்நேரம் நான் யாரென கண்டு பிடித்திருப்பீர்களே. ஹாஹா
நான் வேறு யாருமில்லை, அலெக்ஸாண்டர் தி கிரேடின் தோழனும் துனைவனுமான அசாதாரண குதிரை புஸிபாலஸ்
ஒரு வேலை நான் மட்டும் என் இளவரசனை சந்தித்திருக்க விட்டால், இந்நேரம் ஏதோ ஒரு வயலில் வேலைக்காரணாகவோ இல்லை எதாவது ஒரு பணக்காரன் வீட்டு கொட்டகையில் அவனின் செல்ல பிராணியாகவோ இருந்திருப்பேன்.
என் இளவரசனும் பத்தோடு பதினொன்றாக பெயர் தெரியாத இளவரசனாய் வாழ்ந்து மடிந்திருப்பான்.
ஆனால் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு பிடித்தோம். ஒருவருக்கு ஒருவர் துணையாய், ஒரே கனவை நோக்கி முன்னேறினோம். ஒருவர் மேல் ஒருவர் அளவுக்கடந்த நம்பிக்கை கொண்டிருந்தோம், மரணத்தின் விளிம்பில் கூட ஒருவரை ஒருவர் கெட்டியாய் பிடித்திருந்தோம்.
என் இளவரசனை போன்ற ஒரு மாமனிதனை நீங்கள் சந்திப்பது கடினம் தான். ஆனால் நீங்கள் தேடும் அந்த நண்பனை நீங்கள் சீக்கிரம் சந்திப்பீர்கள் என நம்புகிறேன்.
உங்கள் போராட்டங்களில் உங்களின் உற்ற துணையாய்
உங்கள் தோல்விகளில் உங்களை தாங்கி பிடிக்கும் தூணாய்
உங்கள் வெற்றிகளை கொண்டாடும் நண்பனாய்
உங்கள் கனவுகளை நினைவாக்கும் அற்புத ஜீனியாய்
உங்களின் அந்த அசாதாரண மனிதனை நீங்களும் நிச்சயம் கண்டு பிடிப்பீர்கள்.
ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே
– பைபிள்
வணக்கம்
கதாசிரியரிடம் இருந்து
என்ன நண்பர்களே கதை எப்படி இருக்கு?
உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நம்புறேன்.
ஒரு காலத்துல நானும் உங்கள மாதிரியே தான், தனிமையில் இனிமை கண்டவன். கூட்டு முயற்சியிலே எனக்கு எப்பவும் நம்பிக்கை இருந்ததே இல்லை. பள்ளியிலே கூட ஒன்னா சேர்ந்து பண்ண வேண்டிய ப்ராஜெக்ட் கூட நானே தனியா செஞ்சிடுவேன். மத்தவங்கள நம்பி விட்டதே இல்லை.
ஆனா சமீபத்துல ஒரு கல்லூரி கிளப்காக யாருனே தெரியாத சிலரோட சேர்ந்து வேலை செய்ய வேண்டிய நிலைமை வந்துடுச்சி. நாங்க ஒன்னா இருந்த அந்த சில நாட்கள் எனக்கு ஒரு மிக பெரிய பாடத்த கத்துக் குடுத்துச்சி. நமக்கு எல்லாமே தெரிஜிருக்கணும்னு அவசியமே இல்லை. நம்மள சுத்தி உள்ளவங்க மேல நம்பிக்கை வச்சா போதும். எல்லாமே சரியா நடக்கும். நாம விழுந்தா அவங்க தூக்கி விடுவாங்க, அவங்க தவறு செஞ்சா நாம திருத்துவோம். ஒரு கூட்டு முயற்சியின் பலத்தை நான் அப்போ தான் புரிஞ்சிகிட்டேன்.
நீங்களும் இந்த கதை மூலம் அதை புரிஞ்சிருப்பீங்கனு நம்புறேன்.
அடுத்த கதை நவம்பர் 8 வெளியாகும்.
நீங்க என்ன இன்ஸ்டாகிராம்
https://www.instagram.com/?hl=en
இல்லை
பேஸ்புக்ல
https://www.facebook.com/I-am-a-Textrovert-104311854657727/
கூட தொடரலாம்.
மறக்காம உங்கள் கருத்துக்களை பதிவு செயுங்க.
அந்த பாலோ பட்டனை கொஞ்சம் தட்டி விடுங்க.
அடுத்த கதையில் சந்திக்கலாம் 🙂