6 ஆண்டுகளில் இருவரின் உலகமும் தலைகீழாய் மாறி போனது. கேப்ரியலும் டியானாவும் தங்கள் வாழ்க்கையில் வெவ்வேறு பாதைகளைத் தேர்ந்தெடுத்தனர். அந்த திருமண விழாவுக்குப் பிறகு, அவர்களின் நட்பு மெதுமெதுவாய் மறைய தொடங்கியது. அவர்களின் செல்போன் அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் முதலாம் ஆண்டின் இறுதியில் கணிசமாய் குறைந்து போயின. இரண்டாம் ஆண்டின் முடிவில், கேப்ரியல் டியானாவுடன் இருந்த எல்லா தொடர்பையும் இழந்துவிட்டான்.
கேப்ரியல் தனது மாடலிங் வேலையில் சிறந்து விளங்கினான். படிப்படியாக முன்னேறி, விரைவில் அமெரிக்க பேஷன் துறையின் சிறந்த மாடல்களில் ஒருவனானான். ஆனால் அவனது கேள்விகளுக்கான விடை புதிராகவே இருந்தது. அவன் ஒவ்வொரு நாளும், இரவும்பகலும், தான் சந்தித்த ஒவ்வொரு மனிதர்களிடமும் தேடியும் பயனில்லை. அவன் நிறைய ஆராய்ச்சி செய்தான். புத்தகங்களில் தன் விடையை தேடினான் – எல்லாம் தோல்வியில் தான் போய் முடிந்தது.
ஒருமுறை வயதான ஒரு பாதிரியாரோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பாதிரியார் அவனிடம்,
“பரலோக விதிகளின்படி, பாவம் 5 நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நிலை 1 எளிய மனித குறைபாடுகளை உள்ளடக்கியது – பொய்கள், கோபம், சாபங்கள் போன்றவை …….
நிலை 2 என்பது செல்வம் சம்பந்தப்பட்ட குற்றங்களை உள்ளடக்கியது – மோசடிகள், பிக் பாக்கெட்டிங், கொள்ளை போன்றவை ……..
நிலை 3 சக மனிதர்களுக்கு எதிரான குற்றங்களை உள்ளடக்கியது – கொலை, கற்பழிப்பு, குடிபோதையில் அல்லது போதைப்பொருளினால் ஏற்படும் விபத்துக்கள்……..
நிலை 4 குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை உள்ளடக்கியது – சிறுவர் ஆபாச படங்கள், குழந்தை கடத்தல் ……..
நிலை 5 – மிக கொடூர, பல உயிர்களை கொன்று குவிக்கும் குற்றங்களான – குண்டுவெடிப்பு, இனப்படுகொலை, போர் ……… போன்றவற்றுடன் தற்கொலையையும் உள்ளடக்கியது.
பரலோக சட்டங்கள் தற்கொலையை மிக கொடிய பாவமாக கருதுகிறது”.
மனிதர்களின் வேண்டுதல்களையும் சொர்க்கத்தின் பதில்களையும் கொண்டு சேர்க்கும் சாதாரண தூதனாக இருந்தவன் கேப்ரியல். இந்த செய்தி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “ஏன் இப்படி ஒரு சட்டம்?” என்று அவன் பாதிரியாரை வினவினான். ஆனால் மௌனம் மட்டுமே அவனுக்கு பதிலாக கிடைத்தது. “நான் கண்டுபிடிக்க வேண்டியது இதுதான் போல – அத்தகைய சட்டத்தின் பின்னணியில் உள்ள காரணம்” என்று கேப்ரியல் தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.
அன்று இரவு, கேப்ரியல் தனது மிகச்சிறந்த உடைகளில் ஒன்றை அணிந்திருந்தான். மின்னலாய் ஒளிர்ந்த அந்த சிவப்பு கோட் சூட் அவனை அழகை இன்னும் மெருகேற்றியது. ஒவ்வொரு முறை அவன் ஸ்பாட் லைட்டின் கீழ் நிற்கும் போதெல்லாம் சுற்றி உள்ளவர்களுக்கு அவன் தேவதை போல தோன்றினான் – அதனால் ஃபேஷன் துறையில் ஃபாலன் ஏஞ்சல் என்பது அவனது புனைப்பெயராக மாறி போனது. கேப்ரியல் தனது காருக்குள் நுழைந்து தனது பயணத்தைத் தொடங்கினான், பாஃப்டா அகாடமி விருது விழாவில் பங்கேற்பதற்காக முதல் முறையாக லண்டனிற்கு வந்திருந்தான் கேப்ரியல். அவனது முதல் திரைப்படத்திற்காக ரைசிங் ஸ்டார் பிரிவின் கீழ் அவன் பரிந்துரைக்கப்பட்டிருந்தான். நிச்சயம் விருதை வென்று விடுவோம் என்ற நம்பிக்கை அவனுக்கு.
அவனது கார் மெதுவாக நகரத்தின் பகட்டான பகுதியை நோக்கி நகர்ந்தது. சுற்றிலும் வண்ண வண்ண விளக்குகள் ஜொலி ஜொலிக்க ஒய்யார கட்டிடங்கள் அந்த வீதியை அலங்கரித்தன. அதின் நடுவில் ஆடம்பரமான ஓர் உணவகத்தின் பிரமாண்ட கதவுகள் பணக்காரர்களில் வருகைக்காய் திறக்கப்பட்டிருந்தது. இத்தகைய பகட்டு வாழ்க்கையை கேப்ரியல் ஒரு போதும் விரும்பியதில்லை. ஆனால் இந்த உணவகம் அவன் கண்களை கட்டி இழுத்தது. தன்னையும் அறியாமல் அவன் வேக வேகமாய் அதின் வாசல்களை அடைந்தான்.
ராஜாக்களுக்காகவே கட்டப்பட்ட அரண்மனை போல் தோன்றியது அந்த உணவகம். எங்கும் பொன் நிறம் போர்த்தப்பட்ட மேசைகளும் பளிங்கு போல் மின்னிய அதின் தளங்களும் – அதின் வாயில்களில் உள் நுழையும் அனைவரையும் மெய் மறக்க செய்தது. மிகுந்த கவனத்துடன் அமைக்கப்பட்டிருந்த அதின் நாற்காலிகள் ஒன்றினுள் அமர்ந்தான் கேப்ரியல். அங்கிருந்து பணியாளர் ஒருவர் அவனிடம் மெனுவை நீட்டினான். வாயில் நுழையாத அந்த வினோத பெயர்களும் சாதாரண மனிதனை கலங்கடிக்கும் வகையில் இருந்த அதின் விலையும் – பணக்காரர்களின் உலகம் வித்தியாசமானது என்பதை அவனுக்கு உணர்த்தியது. ஒரு எஸ்பிரெசோ மற்றும் ஒரு சீஸ் கேக்கை ஆர்டர் செய்தான். கேப்ரியல் தனது செல்போனை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஸ்க்ரோல் செய்தான். அவனது ரசிகர்கள் அவனை உற்சாகப்படுத்தி, விருது நிச்சயம் அவனுக்கு தான் என்று கூச்சலிடும் வீடியோக்கள் இருந்தன. அவர்களின் அன்பு அவன் முகத்தில் சிரிப்பை ஏற்படுத்தியது.
உணவகத்தின் மறுமுனையில் இருந்து எழுந்த உரத்த சத்தங்கள் அவன் கவனத்தை கலைத்தது. கோபத்தின் உச்சியில் ஒரு மனிதன் கொந்தளித்துக் கொண்டிருந்தன். அவன் எதிரே ஒரு இளம் பெண் தலை குனிந்து நின்றுக் கொண்டிருந்தாள். அவள் அந்த உணவகத்தின் பணியாளர்களில் ஒருவள். சண்டை வலுக்க தொடங்கியது. சற்று நேரத்தில் அந்த மனிதன் ஓங்கி அறைந்தான். மொத்த உணவகமும் அமைதியில் ஆழ்ந்தது. அதற்க்கு மேல் பொறுக்க முடியாமல் கண்களில் கண்ணீருடன் அந்த பெண் வாசலை நோக்கி ஓடினாள்.
அந்தப் பெண் கேப்ரியல் இருந்த மேசையை கடந்து செல்கையில், அவளின் முகம் அவனை திடுக்கிட செய்தது.
கண்ணீரில் ஒளிந்திருந்த அந்த கண்கள்
ஒரு காலத்தில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்த அதே கண்கள்
அவனுக்கு உயிர்வாழ வலிமை கொடுத்த அதே கண்கள்
அவனது கேள்விகளுக்கு பதில் தந்த அதே கண்கள்
அவனது காவல் தேவதையின் கண்கள்
டியானாவின் கண்கள்!!
கண்ணீரில் மூழ்கியிருந்த அந்த பெண் டியானா என்பதை அவனால் நம்ப முடியவில்லை. அவன் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அந்த பெண் அங்கிருந்து மறைந்து விட்டாள். தனது செல்போன் கீழே விழுந்தது கூட தெரியாமல் கேப்ரியல் அந்த பெண்ணை நோக்கி வேகமாய் ஓட்டம் பிடித்தான்.
அவன் உணவகத்தின் வாயிலை அடைந்ததும் அவன் கண்ட காட்சி அவனை நிலைகுலைய செய்தது. டியானா நடுரோட்டில் கண்ணீருடன் நின்றுக்கொண்டிருந்தாள். ஒரு பெரிய டிரக் மின்னல் வேகத்தில் அவளை நோக்கி பாய்ந்துக் கொண்டிருந்தது.
தன்னை நோக்கி வந்த அந்த டிரக்கை கண்டும்
உயிரற்ற சிலை போல் அதின் பாதையில் அவள் நின்றாள்
சுற்றி இருந்தவர்களின் கூக்குரல்கள் அவள் காதில் விழவில்லை
மரணத்தை ஆவலாய் எதிர்பார்த்து
தன் முடிவை எதிர்பார்த்து காத்திருந்தாள்
அன்றிரவு கேப்ரியல் கண்ட அந்த காட்சி அவனை சுக்கு நூறாய் உடைத்து போட்டது. அவன் மூளை செயல்பட மறுத்து விட்டது. என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து நின்றான். தன் இதயத்தை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, அவன் கண்களை வானத்தை நோக்கி உயர்த்தினான். “இறைவா! அவளை காப்பாற்று” என்று கண்ணீருடன் கெஞ்சினான்.
அந்த நொடியில், ஒரு அதிசயம் நிகழ தொடங்கியது. நேரம் அசையாமல் நின்றது. டியானா, அவளை நோக்கி விரைந்து வந்த டிரக் மற்றும் அந்த இரவில் பெய்து கொண்டிருந்த மழையின் சாரல்கள் – அனைத்தும் நின்று போயின.
எங்கிருந்தோ தோன்றிய தீ மேகம் கேப்ரியலை சூழ்ந்துக் கொண்டது. இந்த மொத்த கதையும் தோன்றிய அதே இடத்திற்கு அவனை மீண்டும் கொண்டு சேர்த்தது – ஜுபிலி விழாவில் அந்த சின்ன மேடையில் அவன் நின்ற அதே இடத்திற்கு. மனித உலகில் அவன் 7 ஆண்டுகளை செலவழித்திருக்கலாம். ஆனால் சொர்க்கத்தில் அது வெறும் 7 நிமிடங்கள் தான். அந்த தூதர்களின் கூட்டம் அவன் வார்த்தைகளை கேட்க அமைதியாய் காத்திருந்தது.
கேப்ரியல் அந்த சிறிய மேடையில் நின்று கொண்டிருந்தான், ஆயிரக்கணக்கான தூதர்கள் அவனது பதிலுக்காக ஆர்வமாய் கத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவை எதுவும் அந்த நேரத்தில் அவனுக்கு முக்கியமாய் தோன்றவில்லை. துக்கம் தொண்டையை அடைக்க, கண்ணீருடன் பேச தொடங்கினான் கேப்ரியல்.
“கடவுளே நீங்கள் அதை பார்த்தீர்களா? டியானா அங்கு மரணத்தின் விளிம்பில் நின்றுக் கொண்டிருக்கிறாள்! அவள் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவெடுத்து விட்டாள். அந்த நொடியில் கூட என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அவளை அங்கு கண்ட நொடியிலேயே என் ஆன்மாவின் ஒரு பகுதி செத்துவிட்டது. அவளுக்கு மட்டும் எதாவது ஆனால், என்னால் நிச்சயம் என்னையே மன்னிக்க முடியாது. அத்தகைய பாரத்தை என்னால் நிச்சயம் சுமக்க முடியாது. அவள் இல்லாத உலகில் என்னால் நிச்சயம் வாழ முடியாது. உயிர் உள்ளவரை நம்பிக்கை உண்டு என்று எனக்கு கற்று தந்தவளே அவள் தான். அவள் இப்படி ஒரு முடிவை ஏன் தேர்ந்தெடுத்தாள் என்று எனக்கு புரியவில்லை. ஆனால் எப்படியாவது அவளை காப்பாற்ற வேண்டும். எதாவது செய்யுங்கள் கடவுளே! அவளை எப்படியாவது காப்பாற்றுங்கள்!” என்று கேப்ரியல் கதறினான்.
கடவுள் அவரைப் பார்த்து புன்னகைத்தார், “ கடைசியில் என் குட்டி தூதன் தன் கேள்விக்கான பதிலை கண்டு பிடித்து விட்டன்” என்று கூறினார். தூதர்கள் குழப்பத்தில் தங்களுக்குள் கிசுகிசுத்தனர். விரைவில் கடவுள் பேசத் தொடங்கினார், “மனிதர்கள் உயிருடன் இருக்கும் வரை அவர்களின் மகிழ்ச்சியை அடைவதர்க்கான பாதை அவர்களை நிச்சயம் வந்தடையும். ஆனால் அதையும் தாண்டி மிக முக்கியமானதொன்றை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் – அவர்களின் சுயநலச் செயலின் பின்விளைவு – அவர்களின் மரணம் அவர்களை சுற்றி உள்ளவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம். அவர்கள் தங்கள் வாழ்வின் முடிவை தேர்ந்தெடுக்கும் அந்த நொடியில் தங்களை சுற்றி உள்ளவர்களையும் கொன்று புதைக்கிறார்கள். அவர்கள் விட்டு செல்லும் அவர்கள் நண்பர்களும் உறவினார்களும் தொடர்ந்து குற்ற உணர்ச்சியுடன் வாழ்கின்றனர். ஒருவேளை, அன்றைய தினம் நான் மட்டும் அவனுக்கு போன் செய்து அவனுடன் பேசி இருந்தால் அவன் நிச்சயம் அப்படி ஒரு முடிவை தேர்ந்தெடுத்திருக்க மாட்டான். ஒரு வேளை நான் மட்டும் அன்று கோப படாமல் பொறுமையாக பேசி இருந்திதால், என் மகள் இன்று உயிருடன் இருந்திருப்பாள். நாம் மட்டும் அவனை இன்னும் கொஞ்சம் அன்பாய் நடத்தியிருந்தால், அவனின் இனிய சிரிப்பை இன்று கண்டிருக்கலாம் – என்னும் குற்ற உணர்ச்சியே அவர்களை கொன்று விடுகிறது.
தற்கொலை என்பது தனிமனிதனின் முடிவைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல – அவர்களை நேசித்த மக்களை வாழ்வை துயரத்திலும் குற்ற உணர்ச்சியிலும் மூழ்கடிக்கும் வெறி செயல் – ஒரு இன படுகொலை” என்றார் கடவுள். அந்த தூதர்கள் கூட்டம் முழுதும் மௌனத்தில் ஆழ்ந்தது. சில முகங்களில் கண்ணீரும் தோன்றியது. கேப்ரியல் கேட்ட வார்த்தைகள் அவனை பயத்தில் மூழ்கடித்தது. எப்படியாவது டீனாவைக் காப்பாற்ற வேண்டும் என்னும் நினைவு அவனை உறுதியாய் பற்றிக் கொண்டது.
கடவுள் கேப்ரியேலை நோக்கி, “நீ உன் பணியை வெற்றிகரமாக முடித்தற்கான வெகுமதியாக 50 மனித ஆண்டுகளை உனக்கு பரிசாக அளிக்கிறேன். போ! சீக்கிரம் போய் என் மகள் டியானவை காப்பாற்று. நீ இன்று உணர்ந்த இந்த உண்மையை உன்னால் முடிந்த வரை மற்றவர்களுக்கு சொல்ல மறந்துவிடாதே. அது நிச்சயம் பல உயிர்களை காப்பாற்றும்” என்று புன்னகையுடன் கூறினார் கடவுள். அவனை சூழ்ந்த அந்த நெருப்பு மேகம் அவனை மீண்டும் அதே நொடிக்கு கொண்டு வந்தது – நம்பிக்கையை இழந்து நின்ற அந்த நொடிக்கு. தன் பலத்தை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு டியானாவை நோக்கி ஓட தொடங்கினான் கேப்ரியல்.
கண்ணீரில் நனைந்த கண்களுடன் சாலையின் மையத்தில் நின்றுக் கொண்டிருந்தாள் டியானா. அந்த 6 ஆண்டுகளில் வாழ்க்கை தாங்க முடியாததாக வலியை தந்தது. இன்றைய நிகழ்வுகள் அவளிடம் மிச்சம் இருந்த கொஞ்ச நம்பிக்கையையும் அழித்து விட்டது.
அவள் தன்வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடிவு செய்தாள். அவளை நோக்கி பாய்ந்து வந்த அந்த ட்ரக்கின் பாதையில் நின்றாள். கடைசியாய் ஒரு முறை தன் உலகை சுற்றி பார்வையிட்டாள். நிலவொளியில் வைரம் போல் மின்னும் அந்த சிவப்பு நிற மனிதன் தன்னை நோக்கி ஓடி வருவதை அவள் கண்கள் கண்டன – அவன் கண்களில் தெரிந்த அந்த காதல் அவளின் பழைய வாழ்வை ஞாபகப்படுத்தியது. அமெரிக்காவில் அவள் கழித்த அந்த இனிய நாட்கள், அவள் விரும்பிய அவளது வேலை, அவள் மீது அதீத அன்பு வைத்திருக்கும் அவள் பெற்றோர்கள். எப்போதும் குறும்பு தனமாய் சற்றி வந்த கேப்ரியல் – அவனிடம் அவள் கூறிய அந்த கடைசி வரிகள் – உயிர் உள்ளவரை நம்பிக்கை உண்டு என்னும் வார்த்தைகள் அவள் காதில் தொனித்தன. “இது தவறு, இது முட்டாள்தனம், உயிர் உள்ள வரை நம்பிக்கை உண்டு” என்று தனக்கு தானே முணுமுணுத்துக் கொண்டு வேக வேகமாய் அந்த சாலையை விட்டு நகர்ந்து நடைபாதையை அடைந்தாள் டியானா. அன்று இரவு தன் வாழ்வின் மிகவும் முட்டாள்தனமான முடிவில் இருந்து தன்னையே காப்பாற்றிக் கொண்டாள் டியானா. அவள் கால்கள் நடுங்க தொடங்கின தலை சுற்ற ஆரம்பித்தது – அந்த நொடியில் அந்த சிவப்பு மனிதன் ஓடி வந்து அவளை இறுக்கமாய் அனைத்துக் கொண்டான். அவன் கரங்களில் தன் கவலைகளை எல்லாம் மறந்து நிம்மதியாய் உறங்க தொடங்கினாள் டியானா.
டம் டிம் என விழும் பாத்திரங்களின் சத்தம் டியானாவை தூக்கத்தில் இருந்து எழுப்பி விட்டது. அவள் சுற்றி சுற்றி பார்த்தாள். படங்களில் வரும் பணக்கார வீடுகளில் ஒன்றை போல் இருந்தது அந்த இடம். முதல் நாள் இரவின் நிகழ்வுகள் அவள் நினைவிற்கு வந்தன. “எந்த தைரியத்தில் நீ முன் பின் தெரியாத ஒருவரின் கரங்களில் மயங்கி விழலாம்? உனக்கு நிச்சயம் பைத்தியம் தான் பிடித்திருக்கிறது” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டாள். படுக்கைக்கு அருகில் இருந்த விளக்கைப் பாதுகாப்பிற்காக கையில் ஏந்திக் கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கி நடந்து சமையலறையை வந்தடைந்தாள்.
அங்கு பிங்க் நிற எப்ரோன் உடன் சமையல் என்னும் பெயரில் எதையோ கிண்டிக் கொண்டிருந்தான் அந்த மனிதன். டியானாவை கண்டதும் அவன் கைகளில் இருந்ததை எல்லாம் கீழே வைத்து விட்டு அவளை இறுக்கமாய் அனைத்துக் கொண்டான். அப்போது தான் டியானா உணர்ந்தாள் – நேற்றிரவு அவளை காப்பாற்றிய அந்த சூப்பர் ஹீரோ கேப்ரியல் என்று. தன் கையில் இருந்த விளக்கை கீழே போட்டு விட்டு அவனை கட்டி அனைத்துக் கொண்டாள். “ஹேய், போதும் போதும் எனக்கு மூச்சு முட்டுகிறது” என்று அவள் சிரித்துக் கொண்டே கூற “ஓ, என்னை மன்னித்து விடு” என்று தன் தலையை சொறிந்துக் கொண்டே கூறினான் கேப்ரியல்.
“சரி, என்ன செய்ய முயற்சிக்கிறாய்? சமையலறை ஏதோ போர்க்களம் போல் இருக்கிறது” என சிரித்தாள் டியானா. “வழக்கமாக நான் காலை உணவைத் தவிர்த்துவிட்டு மதிய மற்றும் இரவு உணவிற்கு ஆர்டர் செய்வேன். உனக்காக பான்கேக் செய்யலாம் என நினைத்தேன். ஆனால் எல்லாம் தலைகீழாகி விட்டது. பார், எல்லாமே கருகி கரி கட்டை போல் ஆகி விட்டது” என்று 5 வயது சிறுவனை போல் புலம்பி தள்ளினான். “தள்ளு, நான் பார்த்து கொள்கிறேன்” என்று சமையலறைக்குள் நுழைந்த டியானா 5 நிமிடத்தில் 2 தட்டுகளில் சுட சுட அருமையான பான்கேக் உடன் வெளியே வந்தாள். இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.
அத்தனை நாட்களாய் அவள் பூட்டு வைத்திருந்த கவலைகள் எல்லாம் வெளியே வர ஆரம்பித்தன. “நான் அந்த முட்டாள் ரால்பை மணந்திருக்க கூடாது. அது தான் நான் செய்த மிக பெரிய தவறு. கல்யாணம் ஆனா முதல் 2 ஆண்டுகளில் வாழ்க்கை நன்றாக தான் இருந்தது. மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தில் தான் என்னால் ஒருபோதும் தாயாக முடியாது, என் வயிற்றில் குழந்தையை சுமக்கும் பாக்கியம் எனக்கு இல்லை என்பதை டாக்டர்களின் மூலம் அறிந்து கொண்டோம். அன்றில் இருந்து தான் என் வாழ்க்கை நரகமாய் மாறியது. அவன் ஒவ்வொரு இரவும் பயங்கரமாய் குடித்து விட்டு நடு ராத்திரியில் தான் வீட்டிற்கு வந்தான். குடி போதையில் என்னை தகாத வார்த்தைகளால் ஏசினான். என்னை வேலைகாரி போல் நடத்தினான். அதை எல்லாம் நான் பொறுத்துக் கொண்டேன் – ஏன் தெரியுமா? இந்த ரால்ப், என் பெற்றோர்கள் எனக்காய் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை. அவர்களின் சந்தோஷத்தை குலைக்க எனக்கு மனம் வர வில்லை. ஆனால் ஒரு நாள் இரவு அதீத குடிபோதையில் நள்ளிரவில் வேறு ஒரு பெண்ணுடன் வீட்டிற்குள் நுழைந்த அந்த ரால்ப், விவாகரத்து பத்திரங்களை என் முகத்தில் வீசி எறிந்தான். அவன் அருகில் இருந்த பெண் என்னை கன்னத்தில் அறைந்து – பெண்ணென்று கூறவே எனக்கு தகுதி இல்லை என்று ஏளனமாக சிரித்தாள். அப்போது முடிவெடுத்தேன், அதற்க்கு மேல் அந்த நரகத்தில் வாழ கூடாதென்று. அந்த விவாகரத்து பத்திரங்களில் கையெழுத்திட்டென், அந்த பெண்ணை பாளாரென்று அறைந்து விட்டு என் உடமைகளுடன் அங்கிருந்து வந்து விட்டேன். இந்த ஊரில் எனக்கு நண்பர்கள் உறவினர்கள் என யாரும் இல்லை, கையில் பணமும் இல்லை. முதல் சில இரவுகள் பாதிரியாரின் உதவியினால் ஆலயத்தில் இரவை கழித்தேன். வேலை தேடி அலைந்து திரிந்து கடைசியில் அந்த ஆடம்பர உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தேன். ஆனால் அங்கும் அவன் வந்துவிட்டான். நேற்றிரவு அந்த ரால்ப் வேண்டுமென்றே தன் மீது சூப்பை கொட்டி விட்டு நான் தான் காரணம் என்று குற்றம் சாட்டினான். அவனை எதிர்த்து என்னால் ஒன்றும் பேச முடியவில்லை – ஏனென்றால் அந்த வேலை எனக்கு அவ்வளவு முக்கியம். என் கண்ணீரை அடக்கி கொண்டு அமைதியாக தான் நின்றுக் கொண்டிருந்தேன். அவன் என் மீது கை ஓங்கவே, இருந்த கொஞ்ச நம்பிக்கையும் கரைந்து போனது. அதனால் தான் அங்கிருந்து ஓடி விட்டேன். இதற்க்கு மேல் உயிரோடு இருந்து என்ன பயன் என நினைத்து, என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்தேன். அந்த ட்ரக்கின் முன் நின்றேன். அந்த நொடியில் தான் என்னை காப்பாற்ற துடித்த அந்த சிவப்பு மனிதனின் உருவம் என் கண்களில் தென்பட்டது. உயிர் உள்ளவரை நம்பிக்கை உண்டு என்று நான் உனக்கு கூறிய வார்த்தைகள் என் நினைவுக்கு வந்தன. அதனால் என் முடிவை மாற்றிக் கொண்டு வேக வேகமாய் அந்த நடை பாதையை அடைந்தேன். உன் கரங்களில் சரிந்தேன்” என்று கண்ணீர் கலந்த புன்னகையுடன் கூறினாள் டியானா.
“அன்று மட்டும் நான் என் இதயத்தின் கூக்குரலுக்கு செவி கொடுத்து அந்த திருமணத்தை தடுத்திருந்தால், என் நினைவுகளை உன்னிடம் கூறி இருந்தால், என் உள்ளுணர்வின் மேல் நம்பிக்கை வைத்து, அந்த ரால்பை கந்த அந்த நொடியிலே அவனை ஓங்கி அறைந்திருந்தால் – நீ இவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்க மாட்டாய். உன்னை காப்பாற்ற நான் தவறி விட்டேன். என்னை மன்னித்து விடு டியானா. இதற்க்கு மேல் உன்னை நான் பத்திரமாக பார்த்து கொள்கிறேன்” என்று எண்ணினான் கேப்ரியல்.
டியானா தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு, என்னை பற்றி பேசியதெல்லாம் போதும். உன்னை பற்றி சொல்? இந்த இடம் ஏதோ பிரபலங்களின் வீடு போல் இருக்கிறது? பணத்துக்காக தவறான செயல்கள் செய்கிறாயா என்ன?” நக்கலாய் கேட்டாள் டியானா. “ஹேய், உனக்கு எவ்வளவு தைரியம்? என்னை பார்த்தல் அப்படிபட்டவன் போலவா தெரிகிறது?” இருவரும் சிரிக்க தொடங்கினர். “நீ விட்டு சென்ற பிறகு நான் மாடலிங்கில் என் முழு கவனத்தை செலுத்தினேன். நான் லண்டனில் அவ்வளவு பிரபலம் இல்லை என்றாலும், அமெரிக்காவின் மிக சிறந்த மடல்களில் ஒருவன் நான். எனக்கு லட்ச கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள் தெரியுமா? இங்கு நடக்கவிருந்த விருது விழாவில் கலந்து கொள்ள தான் நான் லண்டனிற்கு வந்தேன். இது நான் சமீபத்தில் வாங்கிய விடுமுறை இல்லம். அமெரிக்காவில் இதை விட பெரிய பங்களா இருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் கூறினான் கேப்ரியல். “அப்போ, நீ பெரிய பிரபலமாகி விட்டாய், பாருடா” என சிரித்துக் கொண்டே கூறினாள் டியானா.
கேப்ரியல் அவள் இரு கரங்களை பற்றிக் கொண்டு, “டியானா, நீ இங்கிருந்து கஷ்டபட்டதெல்லாம் போதும். என்னோடு மீண்டும் அமெரிக்கவிர்க்கே வந்து விடு. இங்கு நடந்ததை எல்லாம் கெட்ட கணவாய் மறந்து விட்டு வாழ்க்கையை புதிதாக தொடங்கலாம். தனிமரமாய் நான் நின்ற போது நீ என்னை அன்பாய் கவனித்துக் கொண்டாய். என் வாழ்வை வண்ணமயமாக்கினாய், அதே போல் நான் உன்னை கவனித்துக் கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கொடு” என்றான்.
டியானா மெதுவாய் தலையசைத்து “சரி“ என்று முனுமுனுத்தாள். கேப்ரியல் ஆண்டாண்டுகளாய் கேட்க காத்திருந்த வார்த்தைகள் அவை.
கேப்ரியலும் டியானாவும் அமெரிக்காவிற்கு திரும்பினர். கேப்ரியல் “ஏஞ்சல்ஸ் மிஷன்” என்னும் அறக்கட்டளையைத் தொடங்கினான். தற்கொலைக்கு தங்கள் பெற்றோர்களை பறி கொடுத்த குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளும் அறக்கட்டளை அது, கேப்ரியல் 50 அறைகளை கொண்ட பிரமாண்ட பங்களா ஒன்றை கட்டினான். அதில் கேப்ரியல் டியானா மற்றும் அந்த குழந்தைகள் அனைவரும் ஒன்றாய் வாழ்ந்தனர். குழந்தைகள் டியானாவை அம்மா என்றும், கேப்ரியலை அப்பா என்றும் அழைத்தனர். அந்த இடமே ஒரு குட்டி சொர்க்கம் போல் எப்பொழுதும் சிரிப்பொலியில் நிறைந்திருந்தது.
கேப்ரியேலின் முதல் படமே மிகப் பெரிய வெற்றியை அடைந்தது, திரையுலகில் மிக முக்கிய பிரபலமாய் அவன் மாறி போனான், அதற்குள் 20 படங்களில் நடிக்க அவன் முன்குறிக்கப்பட்டிருந்தான். தான் கண்டடைந்த அந்த ரகசியம் உலகின் எல்லா மூலைகளையும் சென்றடைய முயற்ச்சித்தான். “தற்கொலை என்றும் முடிவு அல்ல. நம்மை சுற்றி உள்ளவர்களை குற்ற உணர்ச்சியில் கொன்று புதைக்கும் சுயநல செயல். எனவே எக்காரணத்திர்க்ககாவும் அப்படி ஒரு முடிவை எடுத்து விடாதீர்கள் – உங்கள் உயிர் உள்ளவரை உங்கள் மகிழ்ச்சியை அடைய நம்பிக்கை உண்டு” என்னும் செய்தி அவன் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றிலும் நிச்சயம் இடம் பெற வழி செய்தான்.
டியானாவும் கேப்ரியலும் பல தடைகளையும் போராட்டங்களையும் கடந்து தங்கள் மகிழ்ச்சியை கண்டடைந்தனர்.
வணக்கம்
கதாசிரியரிடம் இருந்து,
அன்பு வாசகர்களே,
இந்த கதை உங்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.
நீங்கள் வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும்,
பாதை எவ்வளவு இருளாக தோன்றினாலும்,
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்,
உயிர் உள்ளவரை நம்பிக்கை உண்டு.
அடுத்த கதை செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாகும்
அதுவரை காத்திருங்கள்.
இது போன்ற கதைகளை படிக்க இந்த தொகுப்பு பட்டனை கிளிக் செய்யுங்க.
இப்படிக்கு,
கேதி!!!