Posted in சிறுகதை, தமிழ், History, inspirational, modern, New, short story, tamil

வேண்டாம் என்றானே!

தென்னிந்தியாவின் நடுமையத்தில் ரம்மியமாய் அமைந்திருந்த விருதுநகர் என்னும் ஊரில் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். தெளிந்த வானத்தை போன்று எளிமையானவன் அவன். பொன்னோ பொருளோ ஏதும்இன்றி சாதாரண சிறுவனாய் சுற்றி வந்தான். அவனிடம் சூப்பர் ஹீரோ சக்திகளோ கின்னஸ் புத்தகத்தில் இடம் பெரும் அளவிற்கு திறமைகளோ இருந்ததில்லை. ஆனால் நம் எல்லோரிடமும் இல்லாத ஒரு அற்புத குணம் அவனிடம் இருந்தது. “வேண்டாம் என்று கூறும் தைரியம் அவனுக்கு இருந்தது”. இதில் என்ன பெரிய அதிசயம்? என்று நீங்கள் கேட்கலாம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், இந்த உலகம் என்ன நினைக்கும் என்று ஒவ்வொரு நொடியும் யோசிக்கும் நம்மை போன்ற மனிதர்கள் மத்தியில் இதை எல்லாம் சிறிதும் கண்டு கொள்ளமல் தன் மனம் போன போக்கை பின் தொடரும் மிக பெரிய தைரியம் அந்த சிறுவனுக்கு இருந்தது. அவனின் இந்த தைரியம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தது. அவர்களின் கனவுகள் நினைவாக வழி வகை செய்தது. அவ்வளவு பெரிய மனிதனாய் மாறினான் இந்த சிறுவன். இந்த அற்புத சிறுவனின் கதையை சொல்லட்டுமா?


தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம்

அந்த சிறுவனுக்கு 6 வையதிருக்கும் போது மரணம் அவன் வீட்டிற்குள் நுழைந்து அவன் தந்தையை தன்னுடன் கூட்டி சென்றது. அன்றைய தினம் அவன் தன் வாழ்வின் மிக பெரிய முடிவொன்றை எடுத்தான். கல்வி வேண்டாம் என்றான். தன் பள்ளி நினைவுகளை எல்லாம் மூட்டை கட்டி விட்டு, தன்னை நெருக்கி கொண்டிருந்த வறுமையை எதிர்த்து போராட ஆரம்பித்தான்.

காலங்கள் உருண்டோடியது. அந்த சிறுவன் மதிப்பு மிக்க இளைஞனாய் வளர்ந்தான். தனது தந்தையின் மளிகை வியாபாரத்தின் மூலம் தன் தாயையும் தங்கையையும் கவனித்துக் கொண்டான். முன்று வேலை உணவு, இருக்க நல்ல வீடு – வாழ்க்கை அவன் எதிர்பார்த்ததை விட நன்றாக மாறியது. “கல்யாணம் பண்ணிக்கோடா ராசா. என் கண்ணு குளிர பாக்க வேண்டாமா” ஒவ்வொரு இரவும் அவன் தாய் கெஞ்சினாள். ஆனால்  

அவனுக்கோ விண்ணை தொட ஆசை. அந்த குட்டி கிராமத்தில் தன் வாழ்வை முடித்துக் கொள்ள அவன் விரும்ப வில்லை. அவனது பதினெட்டாம் வயதில் யாருமே எதிர்பார்த்திராதா, நம்மில் பெரும்பாலானோர் செய்ய துணியாத ஒன்றை செய்தான். அவன் தனது குடும்பம், தொழில், எங்கோ காத்திருந்த முறைப்பெண் என தன்னை கட்டி வைத்திருந்த பாரங்களுக்கெல்லாம் ஒரு முற்றுபுள்ளி வைத்து விட்டு இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்க இந்திய தேசிய காங்கிரஸில் நுழைந்தான்.

அவன் செய்தது சரியா? தவறா? யாருக்கும் தெரியும். ஒரு வேலை தவறான முடிவாக கூட இருக்கலாம். ஆனால் அந்த குட்டி கிராமத்தின் எல்லைக்குள் தன் வாழ்க்கை முடிந்து விடுமோ என்ற பயம், விடை தெரியாத இந்த விடுதலை போராட்டத்தில் அவனை உந்தியது. தெருக்களிலும் வீதிகளிலும் சுதந்திர சுடரை பரப்ப ஆரம்பித்தான். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக ஏராளமான போராட்டங்களில் பங்கேற்றான். பல முறை கைது செய்யப்பட்டு சிறைக்கும் சென்றான் அந்த இளைஞன்.

அவனது 2௦ வருட கடின உழைப்பிற்க்காண பலன் ஒருநாள் அவன் வீடு தேடி வந்தது. கவுன்சிலர் என்னும் பதவியை அவனிடம் நீட்டியது. மாதா மாதம் தவறாமல் சம்பளம், கவுன்சிலர் என்னும் பட்டம், அதனோடு சேர்ந்த அதிகாரம். தெரு தெருவாய் சுற்றி வந்த அவனுக்கு ஒரு நிலையான பாதையாய் அமைந்தது அந்த பதவி. வயதாகி கொண்டே சென்ற அவனுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு. எந்த ஒரு புத்திசாலி மனிதனும் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்று கொண்டிருப்பான். ஆனால் அவனோ இந்த பதவி தனக்கு வேண்டாம் என்றான். “பதவிக்காக வேலை செய்பவன் நான் இல்லை. என் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். அது தான் என் குறிக்கோள். அதற்க்கு உதவாத எந்த பதவியும் எனக்கு தேவை இல்லை” என்று தைரியமாக கூறினான் அவன்.

உலகம் அவனை பைத்தியம் என்று எள்ளியது. அவனோ தன் கண்களுக்கு மட்டுமே புலப்பட்ட தன் கனவை நோக்கி நடந்தான்.  

அவனது ஐம்பதாம் வயதில் தன் வாழ்வில் மிக பெரிய மையில்கல்லை அவன் எட்டினான். தமிழ்நாட்டின் முதல்வராக அவன் தேர்ந்தெடுக்கப்பட்டான். அவனது அமைச்சரவையை தேர்வு செய்ய வேண்டிய நேரம் வந்தது. “எப்பவும் போல நம்ம கட்சில இருந்தே அமைச்சர்கள தேர்ந்தெடுத்து இலாகா ஒதுக்கணும் தலைவரே” கட்சி நிர்வாகம் அவனிடம் கூறியது. ஆனால் எப்பவும் போல அவன் தன்கென்று தேர்ந்தெடுத்த தனி வழியில் செயல்பட்டான். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சட்ட மேதையான சுப்பிரமணியனை தனது நிதி அமைச்சராக நியமித்தான். அவன் முடிவுக்கு பல எதிர்ப்புகள் எழுந்தன. “ஒருவர் குறைகளை இன்னொருவர் நிறைவு செய்து ஒன்றாய் செயல் பட வேண்டியா அமைச்சரவையில் படிப்பறிவில்லாத என் குறைகளை தீர்க்க சுப்பிரமணியனை போன்றதொரு படித்த மேதை நிச்சயம் தேவை” என்று புன்னகை சேர்ந்த துணிவுடன் கூறினான்.

“கருவூலம் காலி தலைவரே. அரசு பள்ளிகளை நடத்த கூட காசு இல்ல”, தமிழகத்தின் முதல்வராய் அவன் கேட்ட முதல் வார்த்தைகள் இவை.

குலகல்வி திட்டம் – பள்ளி இயங்கும் நேரத்தை 6 மணி நேரத்தில் இருந்த 3 மணி நேரமாக குறைபதன் மூலம் இப்போது இருக்கும் ஆசிரியர்களை கொண்டே இரு மடங்கு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் திட்டம். “குழந்தைகள் தங்கள் குடும்ப வர்த்தகத்தை ஓய்வு நேரத்தில் கற்றுக்கொள்ளலாம். ஒரு குயவனின் மகன் குயவன் ஆகட்டும், வணிகனின் மகன் வணிகம் கற்றுக் கொள்ளட்டும். நாம் இருக்கும் நிலைமையில் இதை தான் நம்மால் செய்ய முடியும். நெருக்கடி காலங்களில் முழுமையான கல்வி சாத்தியமில்லை” அவன் அமைச்சர்கள் முன்மொழிந்தனர்.

ஆனால் அவனோ “குலகல்வி திட்டமாவது மண்ணாவது. இந்த மாதிரி அறை குறை திட்டம் எல்லாம் தமிழ் நாட்டுக்கு வேண்டாம். என் மக்களுக்கு தரமான சமமான கல்விய நானே தருவேன்” என்று சவால் விட்டான்.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு முதலமைச்சர் வீடு வீடாக சென்று தன் மக்களுக்காக நிதி திரட்டினார். அவமானமும் கேலி பேச்சும் அவனை பின் தொடர்ந்தது. சிலர் அவனை எள்ளினார். சிலர் அவனை முட்டாள் என்றனர். ஆனால் நல்ல மனிதர்கள் சிலர் அவன் செயலை பாராட்டினர். தங்களால் முடிந்த வரை உதவி செய்தனர். இதன் மூலம் பிறந்தது தான் மாநில கல்வி தொண்டு இயக்கம்.

இவ்வியக்கத்தின் மூலம் திரட்டிய நிதியால் மாநிலம் முழுவதும் பல புதிய பள்ளிகள் திறக்கப்பட்டன. பழைய பள்ளிகள் சீர் செய்யப்பட்டன.

ஆனால் இதையெல்லாம் தாண்டி முதல் முறையாக மதிய உணவு திட்டம் அணைத்து பள்ளிகளிலும் தொடங்கப்பட்டன. “ஒரு முறை என் பயணத்தின் போது மாடு மேய்ச்சிட்டு இருந்த சிறுவன் ஒருவன பார்த்தேன். ஏன் டா தம்பி, பள்ளி கூடத்துக்கு போகலையானு கேட்டபோ அந்த சிறுவன் சொன்னான் – ஐயா பள்ளிக்கு போன மூளைக்கு சோறு கிடைக்கும் ஆனா வைத்துக்கு? பசி முக்கியமா பள்ளி முக்கியமானா பசி தான ஐயா முக்கியம் அப்படின்னு சொன்னான் அந்த சிறுவன். அன்னைக்கு முடிவு செஞ்சேன். பள்ளிக்கூடம் மூளைக்கு மட்டும் இல்ல வயித்துக்கும் உணவளிக்கணும் அப்படின்னு. அதன் மூலம் பிறந்தது தான் இந்த மதிய உணவு திட்டம்” என்று மேடைகளில் முழக்கமிட்டான் அவன்.

இத்திட்டத்திற்கு பொது மக்கள், பிற மாநில அரசுகள், பத்திரிகைகள் என எல்லோரிடமும் இருந்து பாராட்டுகளும் ஆதரவும் குவிந்தது. பள்ளிகளில் சேர மாணவர்களுக்கு பெரும் ஊக்கமாக மாறியது. சாதி வேறுபாட்டை களையவும் கல்வி புரட்சியை தொடங்கவும் வழி வகை செய்தது

அவனின் முயற்சிகளின் மூலம் கிட்ட தட்ட 80,000 மில்லியன் ரூபாய் தன்னார்வ நன்கொடைகள் மூலம் திரட்டப்பட்டது. 2,00,000 மாணவர்கள் புதிதாக பள்ளிகளில் சேர்ந்தனர். 15,000 க்கும் மேற்பட்ட பள்ளிகள் மாநிலம் முழுவதும் கட்டப்பட்டன.

உலகமே முடியாது என்று கூறிய போதும் அதையெல்லாம் ஓரம் கட்டி விட்டு தன் முயற்சியினால் தான் சொன்ன சொல்லை நிறைவேற்றி முடித்தான் நம் ஹீரோ.

இன்றும் கூட லட்சகணக்கான மாணவர்களின் அறிவு பசியையும் வயிற்று பசியையும் ஆற்றும் உறைவிடமாய் தமிழக பள்ளிகள் அமைவதற்கு அவன் தான் காரணம். விண்ணை தாண்டி பறப்பதற்கு அவர்களுக்கு சிறகளித்தவன் அவன் தான். இன்று தமிழர்கள் பல பன்னாட்டு நிறுவனங்களில் தலைவர்களாய் இருப்பதற்கும் உலகின் எல்லா நாடுகளிலும் கோடி கட்டி பறப்பதற்கும் அவனும் ஒரு காரணம். இந்த கதையை எழுதும் நானும் கூட அவன் திறந்த பள்ளிகளில் ஒன்றில் படித்தவன் தான்.

நம் ஹீரோவின் ஆட்சியில் தமிழ்நாடு பொருளாதாரத்தில் செழித்தது. பல தொழில்துறை பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. அணைகள் மூலம் நீர் பாசன வசதி செய்யப்பட்டு விவசாயம் செழிக்க வழி வகை செய்யப்பட்டது. தமிழ்நாடு அவனின் 9 வருட பொற்கால ஆட்சியில் மலர்ந்தது.

ஆனால் இந்த வசந்த காலம் நீண்ட நாள் நிலைக்கவில்லை.

“முதல்வர் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார்” என்ற அதிர்ச்சி செய்தி மூளை முடுக்கெல்லாம் பரவியது. “முதல்வர் ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தாரு?” தெருக்கள் தோரும் மக்கள் குழம்பி நின்றனர்.

“பொருளாதார வளர்ச்சி, மக்கள் முன்னேற்றம் என ஒரு பக்கம் மகிழ்ச்சி சூழ்ந்து இருக்க மறு பக்கத்திலோ என்னை வளர்த்த என் கட்சி – இந்திய தேசிய காங்கிரஸ் நோயுற்று கிடக்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருக்கிறாள். எனக்கிருக்கும் இந்த பெயர் புகழ் பதவி எல்லாம் அவள் தந்தது. இப்படி இருக்க அவள் நிலையை கண்டும் காணாமல் என்னால் எப்படி இருக்க முடியும்? அவளை மீட்டெடுக்க வேண்டியது என் கடமை. . ஐ.என்.சி யின் தலைவர்களே கேளுங்கள்! உங்கள் பதவிகளை தூக்கி எறிந்து விட்டு ஐ.என்.சி யின் வேர்களை வலுப்படுத்த முன் வாருங்கள். ஐ.என்.சி பதவி பித்து பிடித்தவர்களால் அல்ல, இந்த நாட்டை நேசிக்கும் மனிதர்களால் ஆனது என்று இந்த உலகிற்கு நிருபியுங்கள்” ஆணித்தரமாய் கூறினான்.

சொன்னவாறே தன் சிங்காசனம் வேண்டாம் என்று உதறி தள்ளி விட்டு கட்சியை வலுபடுத்த தொடங்கினான்.   

பதவியை அவன் விட்டாலும் பதவி அவனை விட்டபாடில்லை. இந்தியாவின் மிக பெரிய சிம்மாசனம் அவனுக்காக காத்திருந்தது. பிரதமர் என்னும் பட்டம் – அவன் வீடு தேடி நின்றது. ஆம், 196௦ களில் நடந்த தேர்தலில் அவன் பிரதமர் பதவியில் போட்டியிட்டு வெற்றிபெறுவான் என்று உலகமே எதிர்பார்த்திருந்தது. ஆனால் என் ஹீரோவோ இதற்கெல்லாம் மயங்கவில்லை. “பதவியும் வேண்டாம் புகழும் வேண்டாம்” என்று ஆணித்தரமாக கூறினான்.

மற்றவர்களுக்கு உதவுவதையும் அவர்கள் புன்னகைக்கு காரணமாய் மாறுவதையும் தன் வாழ்கையின் இலட்சியமாக்கிக் கொண்டான். தனது பெரும் முயற்சியின் மூலம் இந்திரா காந்தியையும் லால் பகதூர் சாஷ்திரியையும் சுதந்திர இந்தியாவின் அடுத்தடுத்த பிரதமர்களாக பதவி வகுக்க உதவினான்.

அவரன் முதல்வராக இருந்த காலத்தில், விருதுநகர் நகராட்சி அவனது வீட்டிற்கு நேரடி நீர் இணைப்பை வழங்கியபோது, ​​அத்தகைய சிறப்பு சலுகைகள் எல்லாம் தனக்கு வேண்டாம் என்று ஏற்க மறுத்துவிட்டான்.

முதலமைச்சராக தனக்கு வழங்கப்பட்ட இசட்-லெவல் பாதுகாப்பைப் பயன்படுத்த மறுத்தான். அதற்கு பதிலாக ஒரே ஒரு போலீஸ் ரோந்து வாகனத்துடன் பயணம் செய்தான். அவன் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை, சொத்துக்கள் ஏதும் சேர்க்கவில்லை, அதிகாரத்திற்கு அடிமையாக வில்லை, ஒரு ரூபாய் கூட லஞ்சம் பெற்றதில்லை. அவன் இறந்தபோது, 130 ரூபாய் பணம், 2 ஜோடி செருப்பு, 4 சட்டை, 4 வேட்டி மட்டுமே அவன் உடைமையாக இருந்தது.

தனது கடைசி மூச்சு வரை, அநீதியையும் வறுமையையும் சமூகத்தை விட்டு அகற்ற போராடினான். யாருமே எதிர்பார்த்திராத உயரங்களையும் அடைந்தான்.

பணம், பெயர், புகழ், பதவி இவை எல்லாம் அவன் வாசலில் காத்துக் கிடந்த போதும் இவை ஏதும் வேண்டாம் என்று கூறி மக்களுக்கு நல்லது செய்வதை தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டான். அதை சாதித்தும் காட்டினான்.

வேண்டாம் என்று சொன்னானே அவன்.

அவன் வெறும் யாரும் இல்லை – கல்வி கண் திறந்த வள்ளல், கருப்பு சிங்கம், படிக்க மேதை, ஏழைகளின் தலைவன், கர்மவீரன் காமராசனே!

கர்மவீரர் காமராசர்

மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு உணவு வழங்கும் காமராசர்

சில நேரங்களில் நம் ஹீரோவை போல

வேண்டாம் என்று சொல்ல துணிவோமே!

வாய்ப்புகளை இருக்க பிடித்துக் கொள்

சலுகைகளை இருக்க கட்டிக் கொள்

இப்படி ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைக்காது

இப்படி ஒரு சலுகை பூமியிலே இல்லை

இந்த உலகம் உன்னிடம் கூறினாலும்

இது நமக்கு ஏற்றதா? என் வளர்ச்சிக்கு உதவுமா?

என் சந்தோஷத்திற்கு வழி வகுக்குமா?

என்று ஒரு முறை சிந்தித்துக் கொள் நண்பா

நீ வேண்டும் என்று ஏற்கும் ஒவ்வொரு முறையும்

மற்ற எல்லா வாய்ப்புகளையும் உனக்கே தெரியாமல் வேண்டாம் என்று உதறி தள்ளுகிறாய்

வேண்டும் வேண்டும் என்ற பித்தில் திரியும் இவ்வுலகில்

வேண்டாம் என்று கூறவும் கற்றுக் கொள்!

வணக்கம்

கதாசிரியரிடம் இருந்து,

என்ன நண்பர்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க? சாப்பிட்டாச்சா? கொரோனா லாக் டவுன்லாம் எப்படி இருக்கு?

கதை கொஞ்சம் கால தாமதமாகி விட்டது. அடியேனை மன்னித்து விடுங்கள்.

கதை எப்படி இருக்கு? எல்லாத்துக்கும் ஆமாம் ஆமாம் சொல்லி பழகிய நமக்கு வேண்டாம்னு சொல்றது கஷ்டம் தான்.

கொஞ்சம் கொஞ்சமா கத்துப்போமே? சரியா?

இது போன்ற கதைகளை படிக்க இந்த தொகுப்பு பட்டனை கிளிக் செய்யுங்க.

மீண்டும் சந்திப்போம் 🙂

Posted in சிறுகதை, தமிழ், happyending, inspirational, modern, short story, tamil

மாறும் பருவங்கள்

மாற்றம் என்ன அவ்வளவு முக்கியமா?

வழக்கமான வாழ்க்கையில் இன்பத்தையும் ஆறுதலையும் காணும் வித்தியாசமான மனிதர்களில் நானும் ஒருத்தி. அறிமுகமானவர்களின் முகத்தை காண்பதிலும் நன்கு பழக்கப்பட்ட வீதிகளிலும் ஆறுதல் அடையும் மனுஷி நான்.

மாற்றத்தை கண்டு அஞ்சும் ஒருத்தி.

“என்னை போன்றவரா நீங்கள்?”

எனக்கு பரிச்சயம் பிடிக்கும். அதே வழக்கமான காலை, அதே பால்காரனின் குரல், வானொலியில் அதே பழைய பாடல், என் அண்டை வீட்டுக்காரர்களின்  அதே குறட்டை சத்தம், எனக்காக நான் உருவாக்கிய இந்த சின்ன உலகில் சந்தோஷமாய் வளம் வந்தவள் நான்.

ஆனால் ஏன்? என் கணினித் திரையில் ஒளிரும் சொற்களைக் கண்டு குமுறினேன்.

“திருமதி கேட்டி தாம்சன்,

எங்கள் நிறுவனமான செயின்ட் இன்கில்., 36 வருடங்கள் இடை விடாது பணியாற்றி, எங்கள் வளர்ச்சிக்கு உதவிய உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நீங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், எங்கள் நிறுவனத்தின் வாயில்கள் உங்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும்

உங்கள் ஓய்வு காலத்தை மகிழ்ச்சியுடன் செலவழிக்க உங்களை வாழ்த்துகிறோம்.

அன்புடன்,

செயிண்ட் இன்க்.,

எனது நிறுவனத்தில் நான் செலவிட்ட அந்த மணி துளிகள், அதின்  அறைகளுக்கிடையே  ஒளிந்திருந்த பழக்கப்பட்ட முகங்கள், ஒளிரும் திரைகளும் – என் வாழ்நாளின் மிக பெரிய பாகங்கள்.

36 வருடமாய் நான் சிற்பமாய் செதுக்கிய என் வாழ்க்கை ஒரே நாளில் தலை கீழாய் மாறி போனது,

♫ லா லா லலலலா ♫ என் தொலைபேசியின் குரலைக் கேட்டு புன்னகைத்தேன். 10 ஆண்டுகளாக என் ரிங்டோன் கூட மாறவில்லை.

“அம்மா, அடுத்த வாரம் உங்களுக்கு பிளைட்(விமானம்). சின்ன குழந்தை மாதிரி அடம்பிடிக்கம சீக்கிரம் பேக்கிங் செய்ய ஆரம்பிங்க”    

என் அன்பு மகனின் குரல். நான் அறியாத மொழி பேசும், நான் அறியாத மனிதர்கள் வாழும், நான் அறியாத அந்த நாட்டிற்கு வர அழைப்பு விடுத்தது.

எனது மிக பெரிய பயத்தை நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது – மாற்றம்.

என் போராட்டம் வெற்றி பெறுமா? அந்த ஒரு கேள்விக்கு மட்டும் விடை எங்குமே கிடைக்கவில்லை.

எனது மொத்த வாழ்க்கையையும் அந்த சிறிய பழுப்புப் பெட்டிகளில் அடைக்கத் தொடங்கியபோது தான், ​​எனது மதிப்புமிக்க உடைமைகளில் பெரும்பாலானவை பல முறை படித்த தேய்ந்த புத்தகங்களும், குப்பைகளாய் தோன்றிய டிரிங்கெட்டுகளுமே எனப் புரிந்தது. ஆனால் என் மங்கின கண்களுக்கு தான் தெரியும் அதில் ஒளிந்திருக்கும் அற்புத நினைவுகள் – என் வாழ்க்கையின் புதையல்கள்.

ஆச்சரியப்படும் விதமாக, தூசி படிந்த அந்தக் குவியல்களுக்கு அடியில் ஒரு மகத்தான புதையல் வெளிவந்தது, என் பழைய டைரி, அதற்க்கு கிட்ட தட்ட என் வயது. ஹாஹா.

படிந்திருந்த தூசியை உதறிவிட்டு, என் படுக்கையின் அரவணைப்பில் என் கடந்த காலத்திற்குள் பயணிக்க தயாரானேன்.  

அன்புள்ள டயரி

எனக்கு குழந்தைகளை பார்த்தாலே வெறுப்பா வருது.

ஒரே நேரத்தில எப்படி தான் அழுதுகிட்டு, கத்திக்கிட்டு, கூச்சல்போட்டுகிட்டே அதுங்களால ஓட முடியுதோ!

பக்கத்து வீட்டு ஜெனி பாப்பா இருக்காளே, அம்மா அவள பார்த்துக்க சொன்னங்க. அவ என்னனா தட்டை உடைச்சிட்டா, சுவற்றிலே கிறுக்கி வச்சிட்டா, என் பொம்மைய கிழிச்சிட்டா. என்னையே அழ வச்சிட்டா.

நான் வளர்ந்து பெருசானதும் குழந்தைகள கிட்டயே சேர்க்க மாட்டேன்.  

என் மேசையை அலங்கரித்த படம் என் கண்களில் பட்டது. என் 5 வயது மகனை நான் தூக்கிக் கொண்டுடிருக்கும் படம் அது. என் முகத்தில் அப்படி ஒரு புன்னகை. லாட்டரி வென்ற மனிதனை விட, உலகின் முதல் பணக்காரனை விட மகிழ்ச்சியான ஒரு புன்னகை.

என் செல்ல மகன் எப்படியோ என் வாழ்க்கையின் வெளிச்சமாய் மாறி போனான்.

அன்புள்ள டயரி

இந்த வயசானவங்கலாம் எப்படி தான் இந்த காபியை குடிக்கிறாங்களோ?

சுட சுட கசப்பா இருக்கு. அதை போய் காசு குடுத்து வாங்கி குடிக்கிறாங்க.

நான் வளர்ந்து பெருசானதும் இந்த காப்பிய உதறி தள்ளிட்டு தினமும் ஒரு ஐஸ்கிரீம் வாங்க போறேன்.

என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. என்னை சுற்றிக் கிடந்த காபி டம்பளர்கள் என்னை காட்டிக் கொடுத்தன. அதோடு ஒரு நாள் கூட எனக்கு நானே ஐஸ்கிரீம் வாங்கியதாக நினைவே இல்லை. ஹாஹா.

அன்புள்ள டயரி,

எப்படி மத்தவங்க கிட்ட பேசுறது. கொஞ்சம் சொல்லிதாயேன்.

மத்தவங்கள பார்த்ததும் கை எல்லாம் வேர்க்குது, நெஞ்சு பட படக்குது. வாய் ஒன்னா ஒட்டிக்கிட்டு வார்த்தை வெளிய வரமாட்டிங்கிது

இன்னைக்கு முதல் நாள் கல்லூரியிலே நான் கிட்டத்தட்ட அழுதுட்டேன் தெரியுமா.

இப்படியே போன எனக்கு நண்பர்களே கிடைக்கமாட்டங்க போல. நான் தனி மரமா சுத்த வேண்டியது தான்.

பேச பயந்த நான் எப்படியோ வாயை மூடவே மூடத மூதாட்டியாய் மாறி போனேன். நான் சொன்னால் நம்பமாட்டீர்கள். என் தெருவில் உள்ள டீகடைக்காரர், பால்க்காரர், பேப்பர் போடுபவர், போக்குவரத்து காவலாளி, என் தெருவில் வசிக்கும் 20 குடும்பங்கள் என எல்லோரும் எனக்கு நண்பர்கள்.  

அன்புள்ள டயரி,

உனக்கு கிருஷ்யை நினைவிருக்கா?

அதான் வேதியல் ஆய்வகத்துல என் கூட்டாளி..

என் தைரியத்தை எல்லாம் திரட்டி காதலர் தினத்துல என் காதல அவன்கிட்ட சொல்லலாம்னு போனேன். அப்போ அவன் நண்பர்களோட பேசிட்டு இருந்தத ஒட்டு கேட்டேன்.

“ஏய் கிருஷ், என்ன எப்போ பார்த்தாலும் கேட்டி கூடவே சுத்திகிட்டு இருக்கே? சரி இல்லையே…. என்ன காதலா?”  அவன் நண்பன்ல ஒருத்தன் கேட்டான்.

“கேட்டியா? காதலா? அவ முகத்தை பார்த்தாலே எவனா இருந்தாலும் தலை தெருச்சி ஓடிடுவான். அப்படி இருக்க அவளை போய் நானா.. வாய்ப்பே இல்லை.

நான் கொஞ்ச சிரிச்சி பேசுனதுனாலே என் வேலையையும் ஹோம்வர்க்கையும் (வீட்டு பாடத்தையும்) அவளே எழுதி முடிச்சிட்டா. முட்டாள் பொண்ணு. ஈசியா ஏமாற்றலாம்” சிரித்துக் கொண்டே கூறினான் கிருஷ்.

அந்த முட்டாள்… படுபாவி … நான் அவனைக் கொல்ல போறேன்.

ஆனா அவன் சொல்றதும் சரி தான். என்னை யாருக்கும் பிடிக்காது.

அந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது. எப்படி மறக்க முடியும். இரவு முழுவதும் கண்ணீரில் அல்லவா கழித்தேன்.

ஆனால் காதல் என்னை கட்டி அணைத்தது, நான் ஜேசனை கண்ட அந்த நாளில். ஜேசனை – என் காதல் கணவன், என் இளவரசன். அவரோடு நான் கழித்த 25 ஆண்டு திருமண வாழ்க்கை சொர்க்கமாய் தோன்றியது.  

என் ஜேசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகத்தை விட்டு மறைந்து போனான்.

தேய்ந்த அந்த பக்கங்களுக்குள், அந்தக் கதைகளுக்குள், மனித பார்வையில் மறைந்திருந்த ஒரு உண்மையை நான் உணர்ந்தேன்.

என்னையே அறியாமல் என் வாழ்க்கை மாறிவிட்டது

கேட்டியாகிய நான்

குழந்தைகளை வெறுக்கும் ஆறு வயது சிறுமியும் இல்லை

காபியை வெறுத்த பெதும்பையும் இல்லை

கூச்சத்தில் தலை குனிந்த மாணவியும் இல்லை

காதல் தோல்வியில் கண்ணீர் விட்ட மங்கையும் இல்லை

என் மிக பெரிய எதிரியான மற்றம் எப்படியோ இத்தனை நாட்களாய் என் உற்ற நண்பனாய் எனக்கே தெரியாமல் என்னோடு வந்துள்ளான்.

இதை எல்லாம் உணர்ந்த பிறகு – புது நாடு, புது மொழி, புது முகங்கள், அந்த மாற்றமும் நன்றாக தான் இருக்கும் என தோன்றுகிறது.

நிறம் மாறும் பருவங்களே

திசை மாறும் நினைவுகளே

நிலை மாறும் மேகங்களே

உலகம் சொல்ல மறுக்கும் உண்மையை சொல்லட்டுமா?

மாற்றத்தை கண்டு அஞ்சும் மனித இனம்

தன்னையே அறியாமல்

மாறும் பருவங்களை கட்டி அனைக்கிறது.

முற்றும்

கதாசிரியரிடம் இருந்து,

அன்பு வாசகர்களே,

கதை எப்படி இருக்கு?

எல்லாரும் நல்ல இருக்கீங்கனு நம்புறேன் 🙂

கதை பிடிச்சிருந்த ஷேர் பண்ணுங்க , பாலோ பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க

இந்த எழுத்தாளனுக்கு உங்க அன்ப தெரிவீங்க.

அடுத்த கதை 14.2.2021 அன்று ஞாயிறு 0.00 ist மணிக்கு வெளியாகும்.

மறக்காம படிங்க.

இது போன்ற கதைகளை படிக்க இந்த தொகுப்பு பட்டனை கிளிக் செய்யுங்க.

அடுத்த வாரம் சந்திப்போம் நண்பர்களே!